களைகட்டியது தீபாவளி சேல்ஸ்: புதுக்கோட்டை, சேலம், மதுரை, தேனியில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். வழக்கம்போல் இன்று கூடிய சந்தையில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேற்று மாலை விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடைபெறும் சந்தை என்பதால் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. காலை 7.30 மணி வரை சுமார் ரூ. 3 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது.

சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பேளூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பேளூர் வாரச்சந்தை கூடியது. இங்கு வாழப்பாடி, பேளூர், அருநூற்று மலை, கருமந்துறை, நெய்யமலை, சந்துமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1,500 ஆடுகளை விற்பனைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வந்தனர். வரும் 31ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இங்கு ஆடுகள் எடையை பொறுத்து ரூ.7,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை ஆனது. சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதுரை

மதுரை மாவட்டம், மேலூரில் இன்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. ஆடுகளின் தரத்திற்கேற்ப ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று நடந்த சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post களைகட்டியது தீபாவளி சேல்ஸ்: புதுக்கோட்டை, சேலம், மதுரை, தேனியில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: