பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு: இருநாட்டுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: முதலீடு செய்வதற்கு இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை என்று பிரதமர் மோடி ஜெர்மனி தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனி அதிபரான ஓலாப் ஸ்கோல்ஸ் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லியில் நடந்த ஜெர்மனி வர்த்தகத்தின் 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஸ்கோல்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியா-ஜெர்மனி இடையிலான உறவானது இரண்டு திறமையான மற்றும் வலுவான நாடுகளின் மாற்றத்தினால் ஏற்பட்டதாகும் . இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சி மற்றும் வழிசெலுத்துவதில் சுதந்திரம் குறித்து தீவிர கவலை உள்ளது. இதுபோன்ற காலங்களில் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான உறவானது வலுவான நங்கூரம் போன்று உள்ளது.

ஜெர்மனி அறிவித்துள்ள இந்தியாவில் கவனம் செலுத்துங்கள் என்ற உத்தி வரவேற்கத்தக்கது. இரு நாட்டு உறவை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் நாங்கள் பல புதிய மற்றும் முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகின்றது. இது இரு நாடுகளின் பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மாறிய நிலையான வளர்ச்சியாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கான கதையில் பங்கேற்பதற்கும், மேக் இன் இந்தியா என்பதற்கான முன்முயற்சியில் சேருவதற்கும், உலகத்திற்காக உருவாக்குவதற்கும் இது சரியானநேரமாகும். திறமையான இந்திய பணியாளர்களுக்கான விசாக்களை 20 ஆயிரத்தில் இருந்து 90ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்திருப்பதால் இந்தியாவின் திறமையான மனித வளத்தின் மீது ஜெர்மனி வெளிப்படுத்தியிருக்கும் நம்பிக்கை வியப்படைய செய்கிறது.

இந்தியா உலகளாவிய வர்த்தகம் மற்றும் உற்பத்தி மையமாக மாறுகின்றது. இன்றைய இந்தியா ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை மற்றும் தரவு ஆகியவற்றின் வலுவான தூண்களில் நிற்கின்றது. ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்வதற்கு இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை” என்றார். இதனை தொடர்ந்து பேசிய ஜெர்மனி அதிபர் ஸ்கோல்ஸ், ‘‘உலகளாவிய மோதல்களுக்கான அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கு எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா சாசனத்தின் கொள்கைகளின் அடிப்படையில் தீர்வு காணப்படும். இது ஒரு அரசியல் கடமை மட்டுமல்ல. சொத்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பாதுகாக்க வேண்டுமானால் இது கட்டாயமாகும்” என்றார்.

The post பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு: இருநாட்டுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: