நந்திவரம் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு: இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நள்ளிரவு 150 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையோரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் நந்திவரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2,700 மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணி துறை சார்பில், பள்ளியை சுற்றிலும் 10 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் காணப்பட்டது.

இந்நிலையில், இந்த சுற்றுச்சுவர் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த அப்பகுதி மக்கள் அலறியடித்தபடி வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து பார்த்தனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காந்தி நகர் அருகில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவர் நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்ததில் சின்டெக்ஸ் தொட்டி, மின்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம், கல்வெட்டுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு சில பகுதிகளில் சுமார் 5 அடி உயரம் மட்டுமே உள்ளது. இதன் வழியே ஒருசிலர் பள்ளிக்குள் குதித்து, இரவு நேரங்களில் பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை முழுவதுவமாக அகற்றிவிட்டு, 10 அடி உயரத்துக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post நந்திவரம் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு: இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: