மழையால் அழுகியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்


ஊட்டி: மழையால் மலர்கள் அழுகிய நிலையில், தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசனின்போது, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதைக்காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவது வழக்கம். 2வது சீசன் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதில், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இரண்டாம் சீசன் வருகிற 31ம் தேதியுடவன் முடிகிறது. கடந்த 2 மாதங்களில் ஆயுத பூஜை விடுமுறை உட்பட பல்வேறு அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை கிடைத்த நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், சிறிய புல் மைதானம், இத்தாலியன் பூங்கா சரிவுகளில் பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த வாரம் பெய்த மழையால், தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மேரிகோல்டு, டேலியா போன்ற மலர்கள் அழுகின. இதனால், மலர்கள் அலங்கோலமாக காட்சியளித்தது. மழையால் பாதித்த மலர் தொட்டிகள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், மாடங்களில் உள்ள மலர் அலங்காரங்களை மேலும் சில நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

The post மழையால் அழுகியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: