பல்லாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

குன்றத்தூர்: பல்லாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு செய்து, மருத்துவமனையில் உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பல்லாவரத்தில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருந்துகள் போதிய அளவில் இருப்புகள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளிடம் இங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, உங்களை நல்ல முறையில் கவனித்து கொள்கிறார்களா, மருத்துவரை காண்பதற்கு நேரம் ஆகிறதா என்று பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தார்.

பின்னர் மருத்துவர்கள், பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கூடுதல் கவனம் செலுத்தி, மருத்துவமனையின் தரத்தை இதைக் காட்டிலும் முன்னேற்ற வேண்டும், நோயாளிகளை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும், நோயாளிகளுக்கு ஊசி குத்தும்போது வேகமாக குத்தாமல் வலிக்காமல் குத்த வேண்டும், மருத்துவர்களின் பேச்சு நோயாளிகளின் நோயை குணப்படுத்தும் நல் மருந்தாய் அமைய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனை வளாகத்தை சுற்றிப் பார்த்தபோது, மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் அதிகளவில் குப்பை கழிவுகள் தேங்கி கிடந்ததைக் கண்டு, உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்து, குப்பைக் கழிவுகளை எல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும். இது உத்தரவு இல்லை, ஒரு அன்பான வேண்டுகோள் என கூறினார். ஆய்வின்போது இஎஸ்ஐ மருத்துவமனைகளின் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தார்.

The post பல்லாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: