கராத்தே வகுப்புக்கு சென்றபோது நெருக்கம் பெண் பயிற்சியாளருடன் பிளஸ் 2 மாணவி ஓட்டம்: ஆணாக மாறி திருமணம் செய்ய உள்ளதாக கூறியதால் அதிர்ச்சி

தாம்பரம்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது 16 வயது இளைய மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு கராத்தே வகுப்பில் கராத்தே பயின்று வருகிறார். 27 வயதாகும் பெண் கராத்தே பயிற்சியாளராக அங்கு பெண்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி காலை சைக்கிளில் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற 16 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லவில்லை. சிறுமி பள்ளிக்கு வராத தகவலை பள்ளியிலிருந்து குறுஞ்செய்தி மூலம் அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியில் படிக்கும் சக தோழிகளிடம் விசாரித்தபோது, எந்த தகவலும் கிடைக்காததால் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருவிக நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் செல்போன் டவரை ஆய்வு செய்தபோது சிறுமி தூத்துக்குடியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசாரை அனுப்பி நேற்று முன்தினம் சிறுமியையும், அவருடன் இருந்த 27 வயதுடைய கராத்தே பெண் பயிற்சியாளரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், கராத்தே பெண் பயிற்சியாளர் இன்னும் சிறிது காலத்தில் ஆணாக மாற உள்ளதாகவும், அவர் சிறுமியை காதலித்து வருவதாகவும், எனவே, சிறுமியை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமியும் கராத்தே பெண் பயிற்சியாளரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததால் குழப்பம் அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து அவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கராத்தே வகுப்புக்கு சென்றபோது நெருக்கம் பெண் பயிற்சியாளருடன் பிளஸ் 2 மாணவி ஓட்டம்: ஆணாக மாறி திருமணம் செய்ய உள்ளதாக கூறியதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: