வெளுத்து வாங்கிய கனமழையால் பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை அணை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, செழும்பாறு வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கல்லாறு, கும்பக்கரை ஆறு, செழும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த ஆறுகளில் வெளியேறும் தண்ணீர் பெரியகுளம் வராகநதியில் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை
பெரியகுளம் அருகே உள்ளது சோத்துப்பாறை அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 126.28 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அணைக்கு நீர்வரத்து 30 கனஅடியில் இருந்து 204.02 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கும்பக்கரையில் குளிக்க தடை
கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post வெளுத்து வாங்கிய கனமழையால் பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: