மொபட் மீது கழிவுநீர் லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி மற்றொரு மாணவி படுகாயம்: சோழிங்கநல்லூர் அருகே சோகம்

துரைப்பாக்கம்: துரைப்பாகம் அருகே மொபட் மீது கழிவுநீர் லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இதில், மற்றொரு மாணவி படுகாயமடைந்தார். செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகளான கேத்தரின் (19), விஸ்வந்தி (19) ஆகிய இருவரும், நேற்று பிற்பகல் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து, கலைஞர் கருணாநிதி சாலை வழியாக ராஜிவ்காந்தி சாலையை நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி, மொபட் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கேத்தரின் மீது கழிவுநீர் லாரி ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். மற்றொரு மாணவி விஸ்வந்தி படுகாயமடைந்தார். சக வாகன ஓட்டிகள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் நீலாங்கரை போக்குவரத்து போலீசார், பலியான மாணவி கேத்தரினின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கழிவுநீர் லாரியை பிடித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மொபட் மீது கழிவுநீர் லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி மற்றொரு மாணவி படுகாயம்: சோழிங்கநல்லூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: