அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்: எம்எல்ஏகள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிய பேருந்து சேவைகளை எம்எல்ஏக்கள் எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய பேருந்துகள், விழுப்புரம் கோட்ட காஞ்சிபுரம் மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்துகளில் ஒன்று கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து புனித நகரமான திருப்பதிக்கு செல்லும் வழித்தடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் துவக்க விழா காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், பேருந்தில் ஏறிய எழிலரசன் எம்எல்ஏ, ஆர்வம் மிகுதியால் திடீரென திருப்பதி பேருந்துக்கு ஓட்டுநராக மாறி பேருந்தை ஒட்டிச்சென்று, பேருந்தின் செயல்பாட்டை ஆய்வு செய்தார். திடீரென ஓட்டுநராக மாறி பேருந்தை ஓட்டிய எம்எல்ஏவின் செயலை பேருந்தில் பயணித்த பயணிகளும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் திலகர், ராம் பிரசாத், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மிக குறைவாக இயக்கப்பட்டு வந்தது. அதுவும், கல்பாக்கத்தில் இருந்து வரும் திருப்பதிக்கு செல்லும் பேருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து நிற்கும்போது பயணிகள் இருக்கைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பயணித்து வந்தனர்.
அதனால் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக திருப்பதி செல்ல நேரடி பேருந்து சேவை வேண்டும் என செங்கல்பட்டு பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன் அடிப்படையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக திருப்பதி செல்ல நேற்று முதல் புதிய அரசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதன் சேவை துவங்கியது. இந்த புதிய பேருந்து சேவையினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், அதுமட்டும் அல்லாமல் முதன் பயணச்சீட்டு எடுத்து எம்எல்ஏ மற்றும் நகர்மன்ற தலைவர் ஆகியோர் பயணித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

The post அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்: எம்எல்ஏகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: