வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டும்: தமிழக எம்பிக்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா வை தற்போது கையிலெடுத்திருக்கிறது. இந்த திருத்தங்களில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது. அரசியலமைப்பு பிரிவு 30ஐ கொஞ்சம் கூட மனதில் நிறுத்தாமல் இந்த சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது. உதாரணமாக, முஸ்லிம் அல்லாதவர்கள் வக்பு வாரியத்திற்கு தானம் செய்யக்கூடாது. ஆனால் நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது தவறான நோக்கம் கொண்டதாக உள்ளது.

அதே போல, ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பிணையில் வர முடியாத இரண்டாண்டு சிறை தண்டனையை ரத்து செய்வதும் தவறான நோக்கம் கொண்டதாக உள்ளது. நிறைய குளறுபடிகளுடன் சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றவும், இஸ்லாமிய சமுதாய மக்களின் உரிமைகளைப் பறிக்கவும் ஆளும் ஒன்றிய அரசு திட்ட மிடுகிறது.

இந்திய மக்களின் முன்னேற்றம் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல், மத வெறுப்பு அரசியலை மட்டுமே முன்னிறுத்தி மைனாரிட்டி பாஜக அரசு ஆட்சி நடத்துகிறது. எனவே, வக்பு வாரிய சட்டத்தில் தேவையில்லாத திருத்தங்களைக் கொண்டு வரும் இம்மசோதாவிற்கு, மக்களவையில் மீண்டும் ஓட்டெடுக்கும் சூழல் வந்தால் தமிழக எம்பிக்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொருளாளர் ஏ.இப்ராஹீம், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.அப்துல் ரஹீம், மாநிலச் செயலாளர்கள் கே.சித்திக், ஐ.அன்சாரி ஆகியோர் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்திலை சந்தித்து வக்பு வாரிய திருத்த மசோதா அதே வடிவில் சட்டமாவதை கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

The post வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டும்: தமிழக எம்பிக்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: