×
Saravana Stores

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை

திருப்பூர்: பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில் மட்டுமல்லாது பல்வேறு தொழில் செய்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவு திருப்பூர் புது மார்க்கெட் விதி, காமராஜ் சாலை, குமரன் சாலை, டவுன்ஹால், பழைய மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கூடுவது வழக்கம். இதனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையிலும் போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகர பகுதிகளில் செய்யப்பட்ட பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேற்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசாரை பணியமர்த்துவது குறித்து காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்வதோடு மட்டுமல்லாது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுஜாதா, உதவி போலீஸ் கமிஷனர் நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Tirupur ,Tamil Nadu ,Diwali festival ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையையொட்டி 11 இடங்களில் கோபுரம் அமைத்து கண்காணிப்பு