சென்னையில் தீபாவளி பொருட்கள் வாங்க தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசையில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்: பட்டாசு கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை: தீபாவளிக்கு பொருட்கள் வாங்க சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 11 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீபாவளி பொருட்கள் வாங்க படையெடுத்தனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை நேற்று களைகட்டியது.

தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலையிலேயே சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வந்தனர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் தங்களுக்கு தேவையான பேண்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்ெதடுத்தனர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் வந்து குவிந்துள்ளது. புதிய மாடல் ஆடைகளையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். மாலை 5 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது.

ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கண்ணாடி வளையல், கம்மல், கேர் பின், கவரிங் நகைகள், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தேர்ந்தெடுத்தனர். வரும் நாட்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.

அதனை பயன்படுத்தி நிறைய பேர் தீபாவளி பொருட்களை வாங்க வருவர். மேலும் தீபாவளி நெருங்கி வருவதால் வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பஜார் வீதிகளில் மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

* குவியும் சுவீட்ஸ் ஆர்டர்
தீபாவளி பண்டிகையன்று விருந்தினர்கள், நண்பர்களுக்கு சுவீட்ஸ் மற்றும் கார வகைகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சுவீட் வழங்குவதும் உண்டு. இதனால் சுவீட்ஸ் கடைகளில் தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் தொடங்கியுள்ளது. பல சுவீட்ஸ் கடைகளில் தீபாவளி பண்டிகை புக்கிங் தொடங்கியுள்ளது. மேலும் வீடுகளில் செய்யப்படும் சுவீட்ஸ், காரத்திற்கும் இந்தாண்டு கடும் கிராக்கி உள்ளது.

அவர்களும் ஆன்லைன் மூலம் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க முன்பதிவு செய்யலாம், வீடுகளுக்கே வந்து தீபாவளி பலகாரங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால், நிறைய பேர் வீடுகளில் செய்யப்படும் பொருட்களுக்கு ஆர்டர் குவிந்து வருகிறது. ஆர்டரை பொறுத்தே அவர்கள் பொருட்களை தயார் செய்து வழங்கி வருகின்றனர். வரும் நாட்களில் இனிப்பு, காரம் வகைகள் ஆர்டர் கொடுக்க கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னையில் தீபாவளி பொருட்கள் வாங்க தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசையில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்: பட்டாசு கடைகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: