கிண்டி ரேஸ் கோர்சில் நீர்நிலை அமைக்க தடை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக அங்கு செயல்பட்டு வந்த கோல்ப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோல்ப் மைதானத்தை சேதபடுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஜிம்கானா கிளப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், ஜேசிபி டிராக்டர் புல்டோசர் போன்ற இயந்திரங்களைக் கொண்டு 90 மீட்டர் அகலத்திற்கு 10 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

இதனால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போதைய நிலையை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆ.செல்வேந்திரன் ஆஜராகி, இந்த மனுவை தாக்கல் செய்யய மனுதாரருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டனர். தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, அரசு நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று வழக்கு தொடர்வதற்கு ஜிம்கானா கிளப்புக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மெட்ராஸ் ரேஸ் கிளப் ஜிம்கானா கிளப்புக்கு உள் குத்தகை எதுவும் விடவில்லை. இந்த நிலையில், மனுதாரரான ஜிம்கானா கிளப்பிற்கு கோல்ப் கிளப் உள்ள நிலத்தின்மீது உரிமை கோர எந்த உரிமையும் இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post கிண்டி ரேஸ் கோர்சில் நீர்நிலை அமைக்க தடை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: