சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து வங்கதேச இளம்பெண்ணை பாலியலில் தள்ளிய கொடூரம்

* காதலனை கைது செய்து போலீசார் விசாரணை, ரூ.40 ஆயிரத்திற்கு புரோக்கர்களுக்கு விற்றதும் அம்பலம்

சென்னை: சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அழைத்து வந்து வங்கதேச பட்டதாரி இளம்பெண்ணை சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக இளம் பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி 11வது தெருவில் உள்ள குடியிருப்பில், வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் வசித்து வருகிறார். இரவு நேரங்களில் வாலிபர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இவர்களை பார்க்க வந்து செல்வதாக வேளச்சேரி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

அதன்படி வேளச்சேரி போலீசார் நேற்று முன்தினம் குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வங்கதேசத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பெண் மற்றும் அவருடன் தங்கி இருந்த திரிபுரா மாநிலம் அகர்தலாவை சேர்ந்த முகமது யாசின் மியா (23) ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, வங்கதேச நாட்டில் மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதனால் பலர் அந்த நாட்டில் வேலை இழந்தனர். இதனால் சென்னையில் தங்கி பணியாற்றும் ரும்கி என்ற பெண்ணிடம் வேலை கேட்டுள்ளனர்.

அதற்கு ரும்கி வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு இந்தியா வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். பிறகு வங்கதேசத்தில் இருந்து ஏற்கனவே அறிமுகமான திரிபுரா மாநிலத்தில் உள்ள காதலன் முகமது யாசின் மியா உதவியுடன் இளம் பட்டதாரி பெண் மற்றும் அவரது சகோதரன் மனைவி பாத்திமா என்பவருடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்கள் திரிபுராவுக்கு சட்டவிரோதமாக வந்துள்ளனர்.
பிறகு இருவருக்கும் முகமது யாசின் மியா இந்திய குடியுரிமை பெற்றவர்கள் போல் போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஏற்கனவே ரும்கிக்கு, சென்னையில் ஷாப்பிங் காம்ப்ளக்சில் வேலை வாங்கி தருவதாக கூறியபோது, இருவரும் இந்தியா வருவதற்கு முன்பு புகைப்படங்களை ஐஎம்ஓ ஆப் மூலம் அவருக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி காதலன் முகமது யாசின் மியாவுடன் சென்னை வந்ததும், ரும்கி மற்றும் முகமது யாசின் மியா ஆகியோர் வங்கதேசத்தில் இருந்து வந்த 2 பெண்களையும் பாலியல் புரோக்கரான ஹபில், ஜோஷித் ஆகியோரிடம் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

அந்த பணத்தை ரும்கி வாங்கி கொண்டு வங்கதேசத்தில் இருந்து வந்த பாத்திமாவை மட்டும் அழைத்து சென்றுவிட்டது தெரியவந்தது. அதன் பிறகு முகமது யாசின் மியா தனது காதலியை ரும்கி அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து வேளச்சேரி போலீசார் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பட்டதாரி இளம்பெண் மற்றும் காதலியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திரிபுராவைச்சேர்ந்த முகமது யாசின் மியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வங்கதேசத்தை சேர்ந்த பாத்திமா, ரும்கி மற்றும் பாலியல் புரோக்கர்களான ஹபில், ஜோஷித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

* காதலன் முகமது யாசின் மியாவுடன் சென்னை வந்ததும், ரும்கி மற்றும் முகமது யாசின் மியா ஆகியோர் வங்கதேசத்தில் இருந்து வந்த 2 பெண்களையும் பாலியல் புரோக்கரான ஹபில், ஜோஷித் ஆகியோரிடம் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்

The post சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து வங்கதேச இளம்பெண்ணை பாலியலில் தள்ளிய கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: