வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம்

வேளச்சேரி: வீட்டுவாசலில் போதையில் தூங்கிய வாலிபர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். பெரும்பாக்கத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 41வது பிளாக்கை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் மீன் கடையில் பணியாற்றினர். தான் வசித்துவந்த குடியிருப்பில் உள்ள 3வது மாடியின் வீட்டுவாசலில் நேற்றிரவு கலைவாணன் குடிபோதையில் தூங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், இரவு 11.50 மணி அளவில் தலை நசுங்கி கலைவாணன் கொடூரமாக இறந்துகிடந்தது பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெரும்பாக்கம் போலீசார் சென்று கலைவாணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி கலைவாணன் மனைவி கொடுத்த புகாரின்படி, பெரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 3 மாதத்துக்கு முன் கலைவாணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டபோது கலைவாணனை அசிங்கமாக பேசியுள்ளார் என்று தெரிந்தது.

இதையடுத்து சரளாவின் மகன் வசந்த் (21), உறவினர்கள் கலைவாணி, தமிழ், சந்தோஷ் என்கிற வெள்ளை சந்தோஷ், அருண் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். கலைவாணன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கஞ்சா விற்பது பற்றியும் போலீசாருக்கு கலைவாணன் தகவல் கொடுத்துவந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

The post வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: