வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு 10ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் 10ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலை கொண்டு இருப்பதால் ஆந்திராவில் பலத்த மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்பு பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் வடக்கு ஆந்திரப் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில்8ம் தேதி வரை வீசும், மேலும், தெற்கு- மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 65 கிமீவேகத்தில் சூறாவளிக்காற்று வீசும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று 55 கிமீவேகத்தில் வீசும் அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு 10ம் தேதி வரை மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: