அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க நியாயமான காரணங்கள் இருந்தால் எடப்பாடிக்கு விலக்கு அளிக்கலாம்: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு

சென்னை: நான் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரும் காரணங்கள் நியாயமானது என நீதிமன்றம் கருதினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார். மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொகுதி நிதியில் 95 சதவீதம் பயன்படுத்தியதை குறிப்பிட்டு அது இணையதளத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த முறை நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு பதில் மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனக்கு வயது 70 ஆகிறது என்றும், வயது மூப்பு காரணமாகவும் மருத்துவ காரணங்களால், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அவரது கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கின் மீதான விசாரணையை நீதிபதி வரும் 25ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

The post அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க நியாயமான காரணங்கள் இருந்தால் எடப்பாடிக்கு விலக்கு அளிக்கலாம்: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு appeared first on Dinakaran.

Related Stories: