தென்மேற்கு பருவமழையால் நீர்வரத்து 14,127 கன அடியாக அதிகரிப்பு: முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை

சத்தியமங்கலம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 14,127 கன அடியாக அதிகரித்துள்ளதால் முழு கொள்ளளவை எட்ட உள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு நேற்று நீர்வரத்து 7,465 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை அணைக்கு நீர்வரத்து 14,127 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 87.54 அடியாகவும், நீர் இருப்பு 20 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 1205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தென்மேற்கு பருவமழையால் நீர்வரத்து 14,127 கன அடியாக அதிகரிப்பு: முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை appeared first on Dinakaran.

Related Stories: