மதுரை: ரயில்வேயில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற விவரம் அடங்கிய பிங்க் புக் இன்னும் வெளியிடவில்லை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதில், ரயில்வே துறைக்கான திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலிக்காட்சி மூலம் செய்தியாளர்களிடம் நேற்று விளக்கினார். அப்போது அவர், பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2 லட்சத்து 65,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரயில்வே மற்றும் பயணிகள் பாதுகாப்புக்காக ஒரு லட்சத்து 9000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்; ரயில்வே துறையில் என்னென்ன திட்டங்களுக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற முழு விபரங்கள் அடங்கிய பிங்க் புக் ( Pink book ) இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நேற்றே இரயில்வே அமைச்சர் துவங்கி அனைத்து மண்டல பொது மேலாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து பிரச்சாரத்தை துவக்கிவிட்டனர். ஏன் இந்த பதட்டம்? தண்டவாளத்தை போட்ட பின் ரயிலை இயக்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஏன் இந்த பதட்டம்?.. ரயில்வே பிங்க் புக் இன்னும் வெளியாகவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.