கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 2 தமிழக வீரர்களுக்கு வரவேற்பு

மீனம்பாக்கம்: இங்கிலாந்தில நடைபெற்ற சர்வதேச காது கேளாதோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த அணியில் இடம்பிடித்த 2 தமிழக வீரர்கள் விமானம் மூலமாக சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருதரப்பு சர்வதேச காது கேளாதோர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 18ம் தேதி முதல் 27ம் தேதிவரை நடைபெற்றது. மொத்தம் 7 போட்டிகளில், இந்தியா 5ல் வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது. இதில், இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய்ஆகாஷ் (துணை கேப்டன்), சுதர்சன் ஆகிய இருவரும் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 271 ரன்கள் குவித்த சாய் ஆகாஷ் தொடர் ஆட்ட நாயகன் விருதுபெற்றார். தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழிகாட்டுதலில், சர்வதேச காது கேளாதோர் கிரிக்கெட் போட்டிக்கு சாய்ஆகாஷ், சுதர்சன் ஆகிய இருவரும் சென்றிருந்தனர்.

பின்னர், அங்கு போட்டிகள் முடிந்து, இன்று அதிகாலை பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக தமிழகத்தை சேர்ந்த சாய்ஆகாஷ், சுதர்சன் ஆகிய இருவரும் சென்னை சர்வதேச விமான முனையத்துக்கு திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் இருவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மாலை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் சாய்ஆகாஷ் கூறுகையில், எங்களுக்கு முதல் போட்டி விளையாடும்போது, சிறு தடுமாற்றங்கள் ஏற்பட்டன. பின்னர், அடுத்தடுத்த போட்டிகளில் எங்களை தயார்செய்து கொண்டு, 7 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். இதனால் இத்தொடரில் நாங்கள் 5க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

The post கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 2 தமிழக வீரர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: