கிராபைட் ஆலையில் விற்பனையாகாமல் ரூ.30 கோடி மதிப்பு கனிமம் தேக்கம்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

 

சிவகங்கை, ஆக. 4: சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்தி உடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம்(டாமின்) உள்ளது. கிராபைட் கனிமம் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் கோமாளிபட்டி, தேவனிப்பட்டி, ஊகுளத்துப்பட்டி, கண்டாங்கிபட்டி, புதுப்பட்டி, காரம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இப்பகுதி கிராம எல்லை வரை பரவியுள்ளது. 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது. கிரேடு வாரியாக உள்ள கிராபைட் பெயிண்ட், குருசுபுல்(தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை உருக்க பயன்படும் உலை), ராக்கெட், விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்ட அதிக வெப்பநிலை தாங்கும் பொருட்கள் தயார் செய்ய பயன்படுகிறது. இங்கு தயார் செய்யப்பட்டும் கிராபைட், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தொழிற்சாலை தொடங்கப்பட்டபோது தென் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு இங்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த விரிவாக்கமும் செய்யப்படாமல் தொடக்க நிலையில் இருந்ததுபோல் தற்போதும் 120 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இங்கு வெட்டி எடுக்கப்படும் கிராபைட் தனியார் மூலம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்ட கிராபைட் தற்போது வரை விற்பனை செய்யப்படாமல் சுமார் 3 ஆயிரத்து 500 டன் ஆலையிலேயே தேக்கமடைந்துள்ளது. ஒரு டன் கிராபைட் தர வாரியாக ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.95 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும். இதன் மதிப்பு மொத்த மதிப்பு ரூ.30 கோடி வரையாகும்.

இந்த கிராபைட் தற்போது வெயில் மற்றும் மழையில் இருப்பதால் முற்றிலும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராபைட்டுகளை உடனடியாக விற்னை செய்யவும், ஆலையை விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொமுச மாவட்ட துணை செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது: கிராபைட் தேக்கம் குறித்து கிராபைட் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக கிராபைட் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இயந்திரங்களும் செயல்படாமல் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிராபைட் விற்பனைக்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மிகவும் குறைவு. சிவகங்கை போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் கிராபைட் போன்ற கனிமம் கிடைக்கிறது என்றால் அதன்மூலம் மிகப்பெரிய தொழில் வளத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கிராபைட் உப தொழிறசாலைகளின் மூலமே ஏராளமான குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும்.

இங்கிருந்து கிராபைட்டை வாங்கி செல்லும் பிற மாநிலங்களில் கிராபைட் உப தொழில்கள் குடிசை தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. உலகத்திலேயே இங்கு எடுக்கப்படும் கிராபைட் தான் தரம் வாய்ந்தது என வல்லுநர்களால் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் கனிமத்திற்கு செயற்கையான விலை குறைப்பு செய்யப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சி வரை விற்பனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது முற்றிலும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. 3 ஆயிரம் டன் என்பதால் அவைகளை வைப்பதற்கு கூட இடமில்லை. எனவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக தேக்கமடைந்துள்ள கனிமத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Related Stories: