அண்ணாமலை தலைமையில் உவரி கடற்கரையில் வீ த லீடர் அமைப்பினர் தூய்மை பணி

 

திசையன்விளை, ஆக.4: உவரி கடற்கரை பகுதிகளில் ‘வீ த லீடர்’ அமைப்பினர் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் தூய்மைப் படுத்தும் பணியை மேற்கொண்டனர். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்ட தூய்மைப் பிரசாரத்தின் தொடர்ச்சியாக உவரி பகுதிக்கு வந்த அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இந்த மாதம் முழுவதையும் தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்க வேண்டும். கடற்கரைகளை தூய்மையாகப் பராமரிப்பதோடு, 20 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும். தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மாநிலத்தில் உள்ள ஒரு லட்சம் குளங்களில் 50ஆயிரம் குளங்கள் வற்றிப் போய்விட்டன. ஆக்கிரமிப்பில் உள்ள 8 ஆயிரம் குளங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதியில் குப்பைகளை சேகரிப்பதுடன் உவரி கடற்கரையில் 3 டன் வரை குப்பைகளை தொண்டர்கள் சேகரித்தனர். தொடர்ந்து மேடையேறிய சிறுவர்களிடம் பேசிய அண்ணாமலை, கடற்கரையில் எவ்வளவு குப்பைகளையும், பாட்டில்களையும் சேகரித்தீர்கள் என்பது குறித்த அனுபவத்தை வகுப்பறையில் சக மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது மற்ற மாணவர்களுக்கும் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் பள்ளிகளில் தூய்மை பணிகளை பற்றி சக மாணவர்களிடம் பேச வேண்டும்.

சுத்தமும், சுகாதாரமும் குழந்தைகளிடமிருந்தே தொடங்கப்பட வேண்டும். இந்த ஆண்டிற்குள் சுத்தப்படுத்தும் பணியை அனைவரும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: