கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம்

 

தென்காசி, ஆக.4: தென்காசி மண்டல இணைப் பதிவாளர் கு.நரசிம்மன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை உடன் மேற்கொண்டு தீர்வு காண கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி வட்டார அளவில் கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலரிடம் ஆகஸ்ட் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை அன்று (7.8.2026) கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

பெறப்படும் கோரிக்கை மனுக்களானது தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்யப்படும். கூட்டுறவு சார்பதிவாளர்/ களஅலுவலர் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களும், மேலும் துணைப்பதிவாளர்களால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்களும், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் துணைப்பதிவாளர் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமையான (14.08.2026) அன்று தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்யப்படும். கூட்டுறவு சார்பதிவாளர்/ களஅலுவலர்கள் மற்றும் துணைப்பதிவாளர்கள் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களும், மண்டல இணைப்பதிவாளரால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்களும் ஆகஸ்ட் மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையான (21.08.2026) அன்று தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்யப்படும்.

எனவே கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் தங்கள் பணி தொடர்பாகவும், பணி சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாகவும் மேற்சொன்ன நாட்களில் கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

Related Stories: