சிவகங்கை அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

 

சிவகங்கை, ஆக.3: சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய்ப்பகுதியில் 16ம் நூற்றாண்டு வாணாதிராயர்கள் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய்ப் பகுதியில் கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா, முரளிகிருஷ்ணன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டு அக்கல்வெட்டை பார்வையிட்டனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘நான்கு அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள இக்கல்வெட்டில் இரு பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் பத்தொன்பது வரிகளும், மற்றொரு பக்கத்தில், கமண்டலம், சாட்டை, திரிதண்டம் ஆகிய கோட்டுருவங்களும் காணப்படுகின்றன. கல்வெட்டு வரிகள் இப்பகுதியை ஆட்சி செய்த தெய்வ மாவலி வாணாதிராயர் கொடுத்த நிலக்கொடையைக் கூறுகிறது.

இத்தர்மத்திற்கு கேடு செய்பவர்கள் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போவார்கள் என்ற ஓம்படைக் கிளவியுடன் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு காணப்படும் இடத்திற்கு அருகில் சூலம் பொறிக்கப்பட்ட ஒரு கல்லும் காணப்படுவதால் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட நிலக் கொடையாக இருக்கலாம் என அறிய முடிகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்தகாலம் எடுத்த சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயனின் (கி.பி.1515-1533) கல்வெட்டாகவோ அல்லது அவன் பிறகு அவனது தர்மத்தைக் காக்க அவரது வழியினரோ வழங்கியதாக இருக்கலாம் எனக் கருத முடிகிறது. தெய்வ மாவலி வாணாதிராயர் என்ற பெயரில் இங்கு மட்டுமே கல்வெட்டு கிடைத்துள்ளது.

மாபலிச் சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட இவர்கள் மாவலி வாணாதிராயர் என்று தம்மைப் பெயரிட்டு அழைத்துக் கொண்டதோடு, பாண்டிய மன்னர்கள் காலத்திலும், விஜயநகர மற்றும் நாயக்கர்கள் காலத்திலும் அழகர்கோயில், காளையார்கோயில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் குறுநிலத் தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்து வந்துள்ளனர். இவர்களுள் திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்,சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன், சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன் ஆகியோர் கி.பி. பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவர்களது திருப்பணிக் கல்வெட்டுக்கள் அழகர்கோயில், காளையார்கோவில், திருப்புல்லாணி, மானாமதுரை, பிராமணக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: