திண்டுக்கல் முத்தழகுபட்டியில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

 

திண்டுக்கல், ஆக.3: திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுபட்டியில் புனித செபாஸ்தியார் திருத்தலம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று துவங்கிய திருவிழா வரும் 5ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக நேற்று ஆலய மைதானத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடி அர்சிப்பு மற்றும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செபஸ்தியார் உருவம் பொறித்த கொடியை, ஊர் பொதுமக்கள் கையில் சுமந்தபடி, ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த கொடியேற்றத்தை காண்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று இரவு வானவேடிக்கையுடன் புனிதர்களின் இரவு மின் தேர் பவனி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானம் நிகழ்ச்சி வரும் 4ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் நேர்த்திக் கடனாக அரிசி, ஆடு, கோழி, காய்கறிகள் இவற்றை கொண்டு அசைவ அன்னதானம் தயார் செய்யப்பட்டு விடிய விடிய உணவு பரிமாறப்படும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வரும் 5ம் தேதி பகல் தேர்பவனியுடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாட்டை ஊர் பெரியதனக்காரர்கள், டிரஸ்ட் மெம்பர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: