வெளிநாட்டு நிதி, நன்கொடை பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ), அறக்கட்டளைகள் வெளிநாட்டு நிதி பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டப்படி (எப்சிஆர்ஏ) பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான், வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு அனுமதி கிடைக்கும்.
ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டில், எப்சிஆர்ஏயில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் 41,759. தமிழ்நாட்டில் இருந்தவை 5,353. தற்போது, எப்சிஆர்ஏவில் பதிவு செய்து நாடு முழுவதும் 14,437 அமைப்புகளும் தமிழ்நாட்டில் 2,102 அமைப்புகளும் மட்டுமே உள்ளன. இவை வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று பல்வேறு சமூக சேவைகளை ஆற்றி வருகின்றன. கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் இந்த அமைப்புகளின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது.
ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2019ம் ஆண்டு வரை எப்சிஆர்ஏ விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. பதிவை புதுப்பிக்காதது, ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாதது அல்லது விதிமீறல் போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான அமைப்புகளின் எப்சிஆர்ஏ பதிவுகள் ரத்து செய்யப்பட்டன அல்லது காலாவதியானதாக அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு எப்சிஆர்ஏ திருத்த சட்டம் 2020 கொண்டு வரப்பட்டது.
இதில் மிக முக்கிய மாற்றங்களாக, இந்த தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு ஆதார் அல்லது பாஸ்போர்ட் கட்டாயம், அனைத்து வெளிநாட்டு நிதியும் டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளையில் உள்ள ஒரே எப்சிஆர்ஏ கணக்கின் மூலமாக மட்டுமே வர வேண்டும். ஒரு எப்சிஆர்ஏ அமைப்பு மற்றொரு அமைப்புக்கு வெளிநாட்டு நிதியை மாற்றி வழங்க தடை, நிர்வாகச் செலவு உச்சவரம்பு 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைப்பு, அரசின் ஆய்வுக்குப் பிறகே பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் சேர்க்கப்பட்டன.
பின்னர் 2022ம் ஆண்டு மீண்டும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து பெறப்படும் நிதியை அரசுக்கு தெரிவிக்க வேண்டிய வரம்பு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது, நிதி பெறப்படுவது பற்றிய தகவல் அளிக்கும் காலக்கெடு 15 நாட்களிலிருந்து 45 நாட்களாக உயர்த்தப்பட்டது. கடந்த 2024-25-ல் மேலும் சில விதிகள் திருத்தப்பட்டது.
அதன்படி, பயன்படுத்தப்படாத நிர்வாகச் செலவுத் தொகையை அடுத்த ஆண்டில் சேர்க்க அனுமதி, வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை பதிவு செய்யவும் புதுப்பிக்கவும் கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதா- 2026ஐ ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகம் செய்தது.
இது, வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு அமைப்புகள் (என்ஜிஓ), கல்வி நிறுவனங்கள், மதம் சார்ந்த அமைப்புகளுக்கு வரும் நிதியை முறைப்படுத்த ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்திருத்தமாகும். இந்த மசோதாவில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சிறப்பு அதிகார அமைப்பு (Designated Authority): வெளிநாட்டு நிதி பெறும் ஒரு அமைப்பின் எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ, வெளிநாட்டு நிதியுதவி மூலம் வாங்கப்பட்ட அல்லது கட்டப்பட்ட சொத்துக்கள் (நிலம், கட்டிடங்கள்) அரசின் சிறப்பு அதிகார அமைப்பிடம் ஒப்படைக்கப்படும்.
சொத்துக்களைக் கையகப்படுத்துதல் மற்றும் விற்பனை: இந்தச் சொத்துக்களை அரசுத் துறைகளுக்கு மாற்றவோ அல்லது விற்பனை செய்யவோ இந்த அதிகார அமைப்புக்கு உரிமை உண்டு. விற்பனை மூலம் வரும் பணம் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India) சேர்க்கப்படும்.
தானாகவே உரிமம் காலாவதியாதல்: குறித்த காலத்தில் புதுப்பிக்கப்படாத அல்லது புதுப்பித்தல் மறுக்கப்பட்ட எப்சிஆர்ஏ உரிமங்கள் தானாகவே செல்லாததாகிவிடும். நிர்வாகிகளின் தனிப்பட்ட பொறுப்பு: அறங்காவலர்கள் (Trustees) மற்றும் இயக்குநர்கள் மீது தனிப்பட்ட சட்டப் பொறுப்பு சுமத்தப்படும்.
ஒன்றிய அரசின் முன்அனுமதி: மாநில காவல்துறையோ அல்லது உள்ளூர் முகமைகளோ எப்சிஆர்ஏ விதிமீறல்கள் குறித்து விசாரணை தொடங்க ஒன்றிய அரசின் முன்அனுமதி பெற வேண்டும். சிறைத்தண்டனை குறைப்பு: எப்சிஆர்ஏ விதிமீறல்களுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த மசோதாவை ஒன்றிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் தாக்கல் செய்ய உள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் என்ஜிஓ அமைப்புகள் கல்வி, சமுதாய சேவைகள், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய மக்கள் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுகின்றன. அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் சட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து கணக்குகளையும் பராமரித்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி முறையாக, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுவதை இந்த அமைப்புகள் உறுதி செய்யும் அதே வேளையில், இதனை கண்காணிக்கும் கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், வெளிநாட்டு நிதியை பெறுவதே சவாலானதாகவும், அவ்வாறு பெற்று நடத்தப்படும் இந்த அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்படுமா என்ற அச்சத்தை தற்போது கொண்டு வந்துள்ள எப்சிஆர்ஏ திருத்த மசோதா 2026 ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அச்சத்தின் நியாயத்தை உணர்ந்து, இது தொடர்பாக கருத்துக்களை கேட்டு பாதிப்பும் பாரபட்சமும் அற்ற சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும். முறைப்படுத்துவது அல்லாமல் சிறுபான்மை அமைப்புகளை முடக்குவதாக இருந்து விடக்கூடாது என சிறுபான்மை அமைப்பினரும், பல்வேறு சமூக அக்கறை கொண்டவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
* சிறுபான்மை அமைப்புகள் எதிர்க்க காரணம் என்ன?
இந்த மசோதாவை எதிர்க்க சிறுபான்மையினரும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றன. சிறுபான்மை நிறுவன சொத்துக்கள் கையகப்படுத்தப்படலாம் என்பது முதன்மை அச்சமாக இருக்கிறது. சிறுபான்மை நிறுவனங்களுக்கான ஆபத்து: பல பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமூக நல மையங்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நன்கொடைகள் மூலம் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. எப்சிஆர்ஏ உரிமம் மறுக்கப்பட்டால், இந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்தும் அபாயம் உள்ளது.
அரசியலமைப்பு உரிமைகள்: சிறுபான்மையினர் தங்கள் கல்வி மற்றும் சமய நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 26 மற்றும் பிரிவு 30 ஆகியவற்றுக்கு இது எதிராக உள்ளது என விமர்சிக்கப்படுகிறது. மேல்முறையீட்டு உரிமை இல்லாமை: உரிமம் ரத்து செய்யப்படும்போது, நிர்வாக ரீதியான முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகுவதற்கான தெளிவான பாதுகாப்பு வழிகள் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
* வெளிநாடுகள் – இந்தியா வேறுபாடு
இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளிநாட்டு நிதி பெற அரசிடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் பெரும்பாலான வெளிநாடுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. எந்த நாட்டில் இருந்து நிதி பெறப்படுகிறதோ அந்த நாட்டின் கொள்கைகளை செயல்படுத்துவது, சட்டவிரோதமான செயல்களில் நிதியை பயன்படுத்துதல், அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துதல் இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிதி பெறும் அமைப்புகள் அரசிடம் பதிவு செய்தே ஆக வேண்டும், பிரத்யேக வங்கிக் கணக்கு மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இல்லை.
* முக்கிய மாற்றங்கள்
* 2020 திருத்தம்தான் மிகப் பெரிய மாற்றம். இது வெளிநாட்டு நிதியின் வரவு, பயன்பாடு மற்றும் கண்காணிப்பை மிகவும் கடுமையாக்கியது.
* 2022 திருத்தம் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளுக்கான சில நடைமுறைகளை எளிமைப்படுத்தியது.
* 2024- 25 திருத்தங்கள் நிர்வாக மற்றும் நடைமுறை சார்ந்தவை.
* 2026 மசோதா வெளிநாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட சொத்துகளின் மேலாண்மை மற்றும் பதிவு நடைமுறைகளை மேலும் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
* எப்சிஆர்ஏயில் பதிவு செய்த தன்னார்வ அமைப்புகள் (2014 – 2026 ஒப்பீடு)
* நாடு முழுவதும் பதிவு செய்து இயங்கிய அமைப்புகள் 2014ம் ஆண்டு 41,759 2026ம் ஆண்டு 14,437
* தமிழ்நாட்டில் பதிவு செய்து இயங்கிய அமைப்புகள் 2014ம் ஆண்டு 5,353 2026ம் ஆண்டு 2,102
