×

35 கோடி இளைஞர்களை கொண்ட இந்தியாவில் தனித்திறன்கள் இல்லாததால் தடைபடும் வேலைவாய்ப்புகள்:: விழிப்புணர்வு நாளில் கல்வியாளர்கள் ஆதங்கம்

 

இன்றைய இளைஞர்கள் தான் நாளைய சமுதாயத்தை வழிநடத்தும் தலைவர்கள். எனவே அவர்களை நல்வழிப்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்பதும் அரசு மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் இலக்காக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஜூலை 15ம் தேதி (இன்று) ‘உலக இளைஞர் திறன் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்தவகையில் நடப்பாண்டு (2026) இளைஞர் திறன் கொண்டாட்டமானது ‘பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான இளைஞர் திறன்கள்’ என்ற இலக்கோடு அனுசரிக்கப்படுகிறது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இவர்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். நாட்டின் சொத்துக்களாக கருதப்படும் இளைஞர்களை நல்வழிப்படுத்தி சீர்மிகு எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 50 சதவீதம் பேர், 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். 35 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்ைக 65 சதவீதமாக உள்ளது.

15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 34 சதவீதம் பேரின் பங்களிப்பு தேசிய வருமானத்தில் உள்ளது. இந்தவகையில் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க தனித்திறன்களை வளர்ப்பதில் இன்றைய இளைஞர்களிடம் போதிய ஆர்வம் இல்லை. இதனால் உயர்கல்வி படித்த நிலையிலும் அவர்களின் வேலைவாய்ப்புகள் தடைபட்டு வருகிறது என்று பல்வேறு அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன. இதுகுறித்து இளைஞர்நலன் மற்றும் மேம்பாடு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிபரங்கள் படி 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 1.2 பில்லியன் இளைஞர்கள் உள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை பொறுத்தவரை தற்ேபாதைய நிலவரப்படி இளைஞர்களின் ேதசமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடைசியாக நடந்த கணக்கெடுப்புகளின் படி இந்தியாவில் 35 கோடி இளைஞர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் பணியற்றோர் பிரிவில் உள்ளனர். இதனால் இந்தப்பிரிவினரிடையே வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடுவது வேதனைக்குரிய ஒன்று. இந்தியாவில் வேலையின்மை என்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இடைநிலை மற்றும் உயர்கல்வி பயின்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் இங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. படித்த பட்டதாரிகளை போதுமான பணிகளில் அமர்த்தும் வகையில் பொருளாதாரம் மேம்படவில்லை என்பதும் இதற்ெகாரு முக்கிய காரணம். அதேநேரத்தில் இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி என்பது வேலைக்கு செல்வதற்கும், அதிக சம்பளம் பெறுவதற்கும் மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் மதிப்பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனித்திறன்களுக்கு இளைஞர்கள் கொடுப்பதில்லை. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களின் அறிவும் திறமையும் பயன்படாமல் போகிறது.

வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப திறனுடைய பட்டதாரிகளை தேர்வு செய்யவே நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. பயிற்சி என்ற பெயரில் நேரத்தையும், பணத்தையும் இழப்பதற்கு எந்த நிறுவனமும் விரும்புவதில்லை. இதன் காரணமாகவும் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது. தங்களை மேம்படுத்தி திறன்களை வளர்த்துக் கொள்ளும் பணியாளர்களை நிறுவனங்களும் எளிதில் வேலையில் இருந்து விடுப்பதில்லை என்பதே உண்மை. மொத்தத்தில் இளைஞர்களிடம் பல்வேறு திறன்கள் உள்ளது. ஆனால் அதை வெளிக்கொண்டு வருவதில் தான் வெற்றியும், தோல்வியும் உள்ளது. எனவே படிக்கும் போதே திறன்களை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

மிக இளமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்
ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை (26.9 கோடி) இரண்டாமிடத்தில் உள்ளது. ஆனால் 35 கோடி இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்த வகையில் மிக இளமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்த பெருமைக்கு மேலும் சிறப்பூட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டு இளைஞர்கள் முன்னேற வேண்டும். அதன் மூலம் நாட்டையும் முன்னேற்ற வழிவகுக்க வேண்டும் என்பதும் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக 62% வேலையின்மை
‘‘இளைஞர் திறன்வளர்ப்பு முயற்சியாக ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனாலும் ஒரு புறத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு என்பது பல்லாண்டுகளாக தொடரும் அவலமாகவே உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்புகளின் படி 2023ல் 6.3சதவீதமாக இருந்த வேலையின்மை நடப்பாண்டில் 8.8சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நகர்ப்புறம், கிராமப்புறம், ஆண்கள், பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 62.28சதவீதமாக உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையின்மையை உறுதி செய்துள்ளது,’’ என்பதும் இளைஞர் மேம்பாட்டு அமைப்புகளின் ஆதங்கம்.

Tags : India ,
× RELATED சென்னை, பெங்களுருவில் அதிகம்; பருவநிலை...