×

சந்தை வீழ்ச்சியில் லாபத்தை இழக்காமல் இருப்பது எப்படி?: கணேஷ் மோகன் தரும் பாடம்!

முதலீட்டு அபாயங்களில் மிகப் பெரியவை உணர்ச்சி பூர்வமானவை. முதலீட்டைப் பற்றி இதுவரை கூறப்பட்ட மிக ஆழமான கருத்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த மேற்கோளை நான் அடிக்கடி நினைவுகூர்வேன். ஏனெனில், முதலீட்டைப் பற்றிய மிக எளிமையான உண்மைகளில் ஒன்றை இது துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

இது நாம் நோக்குவதை பங்குச் சந்தையிலிருந்த இருந்து மேலும் சக்தி வாய்ந்த ஒன்றுக்கு நகர்த்துகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள், நமது முதலீடுகளுக்கான மிகப் பெரிய அபாயங்கள் பங்குச் சந்தை வீழ்ச்சிகள், பணவீக்கம், வட்டி விகித மாற்றங்கள் அல்லது புவிசார் அரசியல் நிகழ்வுகள்தான் என்று நினைக்கிறோம்
இந்த அபாயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான்.

ஆனால், பல ஆண்டு கால அனுபவத்திற்குப் பிறகு நான் உணர்ந்து கொண்டது என்னவென்றால், நீண்ட கால செல்வ உருவாக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பது அல்ல; மாறாக, பங்குச் சந்தையில் நடக்கும் மாற்றங்களுக்கு நாம் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதுதான். வரலாற்றில் ஒவ்வொரு பெரும் பங்குச் சந்தை நெருக்கடியும் வித்தியாசமாகவே தோன்றி வந்துள்ளது.

டாட்-காம் பபிள் என்பது தொழில்நுட்பத்தைப் பற்றியது.

உலகளாவிய நிதி நெருக்கடி என்பது வீட்டுச் சந்தையையும் அதிகப்படியான கடன் பயன்பாட்டையும் (ஹவுசிங் மற்றும் லீவரேஜ்) பற்றியது.

கோவிட் வீழ்ச்சி என்பது பெருந்தொற்றைப் பற்றியது.

அதை விட சமீபமாக, உயர்ந்த பணவீக்கம், புவி சார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வட்டி விகித உயர்வுகள் ஆகிய முதலீட்டாளர் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளன.

இருந்தாலும், பெரும்பாலான முதலீட்டாளர் நடத்தை இவை எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக விளங்கியது. முதலீடு செய்தலின் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்று என்னவென்றால், இரண்டு முதலீட்டாளர்கள் ஒரே அளவிலான முதலீட்டைக் கொண்டிருந்த போதும், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட முடிவுகளைப் பெற முடியும். ஒவ்வொரு பங்குச்சந்தை சரிவும் இரண்டு வகையான இழப்புகளை உருவாக்குகிறது. முதலாவது சந்தையினால் ஏற்படுகிறது. இரண்டாவது முதலீட்டாளர்களால் ஏற்படுகிறது. பல சமயங்களில் இரண்டாவதுதான் பெரியது என்று வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும் போது, அச்சம் நம்மைப் பீடிக்கிறது. நஷ்டத்தைப் பற்றிய அச்சம்தான் பெரும்பாலும் முதலீட்டாளர்களை வெளியேற வைக்கிறது. சந்தை நிச்சயமற்ற நிலையில் இருக்கும் போது, பல முதலீட்டாளர்கள் எந்த ஒரு சாதாரண மனிதனும் செய்யக் கூடியதையே செய்கிறார்கள். அவர்கள் நிச்சயமான தன்மையைத் தேடுவார்கள். நஷ்டத்தை நிறுத்த விரும்புவார்கள். பாதுகாப்பை விரும்புவார்கள். அதனால் அவர்கள் முதலீட்டில் இருந்து வெளியேறி, தெளிவு திரும்பும் வரை காத்திருப்பார்கள். அதன் பிறகு ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடக்கிறது.

வரலாற்றில் பார்த்தால், பங்குச் சந்தைகள் எப்போதுமே மீண்டு வந்துள்ளன. உடனடியாக இல்லை. கணிக்க முடியாத வகையில் இல்லை. ஆனால் காலப் போக்கில் அவை மீளத்தான் செய்கின்றன. இங்கேதான் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அந்த மீட்சியைத் தவறவிடுகிறார்கள். முதலீட்டில் 15 ஆண்டுகள் நீடித்ததற்காக வருந்திய முதலீட்டாளர்களை நான் அரிதாகவே சந்தித்துள்ளேன். ஆனால், பங்குச்சந்தைகள் அதீத கொந்தளிப்பில் இருந்த போது முதலீட்டில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததற்காக வருந்தும் பலரை நான் சந்தித்துள்ளேன்.எனவேதான், முதலீட்டில் உணர்ச்சிகள் இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை.

அச்சம், தற்காலிக வீழ்ச்சிகளை நிரந்தரமானவை என்று நம்மை நம்ப வைக்கிறது. பேராசை, நல்ல நாட்கள் என்றென்றும் நீடிக்கும் என்று நம்மை நம்பச் செய்கிறது. பொறுமையின்மை, நீண்டகால வரவைக் குறுகிய காலத்திலேயே எதிர்பார்க்க வைக்கிறது. இந்த உணர்வுகளே ஒன்று சேர்ந்து, பல சமயங்களில், பங்குச் சந்தைகள் அளிக்கும் வரவுக்கும் முதலீட்டாளர் பெறும் வரவுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்குகின்றன.

இந்த உணர்வுகள் முற்றிலும் இயற்கையானவையே. இது முற்றிலும் சாதாரணமானது; ஒவ்வொரு முதலீட்டாளரும் இவற்றை அனுபவிக்கிறார். வித்தியாசம் என்னவென்றால், முதலீட்டாளர்கள் இந்த உணர்வுகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதுதான்.

என் கருத்துப்படி, வெற்றிகரமான முதலீட்டாளர்கள் என்பவர்கள் பங்குச் சந்தையின் போக்கை துல்லியமாக முன்கூட்டியே கணிப்பவர்கள் அல்ல. மாறாக, பங்குச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளால் மற்றவர்கள் உணர்ச்சி பூர்வமாக எதிர்வினை ஆற்றும் நேரங்களிலும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பவர்களே.
இன்று இதை மேலும் கடினமாக்குவது நம்மால் அணுகக் கூடிய தகவலின் அளவு ஆகும். ஒரு தலைமுறை முன்பு, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் புதுப்பிப்புகளை அவ்வப்போது சரிபார்த்தார்கள். இன்றோ, பங்குச் சந்தை நமது பாக்கெட்களில் உள்ளது.

செய்தி அறிவிப்புகள், சமூக ஊடகப் பதிவுகள், நிபுணர் கருத்துகள் மற்றும் வாட்ஸ்ஆப் ஃபார்வார்டுகள் நம் கவனத்துக்காக அன்றாடம் போட்டி போடுகின்றன. தகவலுக்கான அணுகல் இனிமேல் ஒரு சவாலே அல்ல. சவால் ஆனது நாம் இந்தத் தகவல் ஓவர்லோடுக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதுதான்.
செல்வ உருவாக்கம் என்பது அறிவுக் கூர்மையின் குறைவாலோ அல்லது தகவலுக்கு அணுகுதல் இல்லாததாலோ அரிதாகவே அழிக்கப் படுகிறது. அது பல சமயங்களில், அச்சம், பேராசை, பொறுமையின்மை, அதீத நம்பிக்கை மற்றும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உணர்ச்சிபூர்வமான எதிர்விளைவுகளால் அழிக்கப் படுகிறது.

பங்குச் சந்தைகள் எப்போதும் கணிக்க முடியாதவையாகவே இருக்கும். கவலைப்படுவதற்கு எப்போதும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கவே செய்யும். ஆனால், உண்மையான சவாலானது உணர்ச்சிகள் நம்மை நேர் எதிராகச் செயல்படத் தூண்டும் போது, ஒரு நீண்ட காலத் திட்டத்திற்கு நாம் எவ்வளவு கட்டுப்பாடுடன் இருக்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது.

போர்கள், பொருளாதார மந்தநிலைகள், பெருந்தொற்றுகள் மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகியவற்றிலிருந்து பங்குச் சந்தைகள் மீண்டு எழுந்துள்ளன என்பதை வரலாறு காட்டியுள்ளது. ஆனால் அதை விடப் பெரிய கேள்வி என்னவென்றால், அந்த மீட்சியிலிருந்து பயனடையும் அளவுக்கு முதலீட்டாளர்கள் போதுமான காலம் முதலீட்டில் நீடித்திருக்க முடியுமா என்பதுதான்.

ஏனென்றால், முதலீடு செய்வதில், மிகப்பெரிய ஆபத்து பல சமயங்களில் பங்குச் சந்தையே அல்ல.
அது நாம் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே!

*முந்தைய செயல்பாடு வருங்காலத்தில் நீடித்து நிற்கக்கூடும் அல்லது நீடித்து நிற்காமலும் போகக்கூடும்.
~ மேலாண்மை இயக்குநர், பஜாஜ் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட். கணேஷ் மோகன்

Tags : Ganesh Mohan ,
× RELATED ஒற்றைக் குடையின் கீழ் உயர் கல்வி...