அன்று, தேசிய கல்விக்கொள்கை; இன்று, விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான். நாட்டின் கல்வி அமைப்பு முழுவதையும் தன் அதிகாரப்பிடியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஒன்றிய பாஜ அரசின் தீவிர முயற்சிகளின் அடுத்தடுத்த படிநிலைகள் இவை என்ற விமர்சனங்கள் நாடு முழுவதும் கல்வியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக மாணவ அமைப்புகள் போராட்டங்களில் குதித்து வருகின்றன.
இவ்வளவு தீவிர எதிர்ப்புகள் வலுப்பதற்குக் காரணம், உயர் கல்வி முழுவதையும் ஒன்றிய பாஜ அரசு தன் ஒற்றை அதிகாரக் குடையின் கீழ் கொண்டு வரத்துடிப்பது தான் என்கின்றனர் கல்வியாளர்கள். கடந்த 2020ல் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி என்பதை சுட்டிக்காட்டி அப்போதைய திமுக அரசு அழுத்தம் திருத்தமாக எதிர்த்தது. இன்னும் சொல்லப்போனால், பாஜ தலைமையிலான ஆட்சியில் உள்ள மகாராஷ்டிராவிலேயே இதற்கு எதிர்ப்பு வலுத்தது.
எனினும் இந்தி திணிப்பு இல்லை என்ற உத்தரவாதத்துடன் அந்த மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதேபோல்தான், உயர் கல்வியில் மாநில உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் (ஆணையம்) மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆந்திரா, மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய பாஜ கூட்டணி ஆளும் மாநில அரசுகள் கூட இதனை எதிர்ப்பதில் இருந்தே இதன் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா கடந்த ஆண்டு இறுதியில் தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உயர் கல்வியின் கட்டமைப்பையே மாற்றும் வகையில் இதில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், உயர் கல்வியை கட்டுப்படுத்த ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதுதான். தற்போது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)மற்றும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) ஆகிய 3 அமைப்புகள் உயர் கல்வியை கட்டுப்படுத்தும் அமைப்புகளாக உள்ளன. இவற்றை கலைத்து விட்டு, ‘விக்ஷித் பாரத் அதிஷ்தான்’ என்ற ஒற்றை தலைமை அமைப்பு உருவாக்கப்படும்.
இதன் கீழ், கல்வித் தர நிர்ணயம் (Standard-setting), ஒழுங்குமுறை (Regulation), மற்றும் அங்கீகாரம் (Accreditation) ஆகிய 3 கவுன்சில்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த ஒற்றை அமைப்பின் கீழ் உயர்கல்வி ஒழுங்குமுறை கட்டமைப்பில் அதிகாரம் அளவுக்கு அதிகமாக மையப்படுத்தப்படுவது தான் இதில் உள்ள பேராபத்து என்கின்றனர் எதிர்ப்பாளர்கள். இதற்கு மசோதாவின் முக்கிய அம்சங்களாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, இரண்டு பிரிவுகள.
பிரிவு 45 மற்றும் 47 ஆகியவை தான் அவை. இந்தப் பிரிவுகள், ஆணையம் மற்றும் அதன் கீழ் உள்ள கவுன்சில்களுக்கு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகின்றன. மேலும், உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்புகளை அதிகபட்சமாக ஓராண்டு வரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு இந்த மசோதா வழங்குகிறது.
இது மட்டுமின்றி, ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தரநிலைக் கவுன்சில்களின் கட்டமைப்பு குறித்தும், விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் ஆணைய தலைவர் மற்றும் பல்வேறு கவுன்சில்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேடல் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மசோதாவின் 45வது பிரிவு, ஆணையம் அல்லது அதன் கவுன்சில்களுக்குக் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குவது மட்டுகின்றி, இவற்றுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஒன்றிய அரசின் முடிவே இறுதியானது என்றும் குறிப்பிடுகிறது.
மேலும், இந்த மசோதாவின் 47வது பிரிவு, ஆணையம் அல்லது அதன் கவுன்சில்களை 6 மாதங்கள் வரை நிறுத்தி வைக்கவோ அல்லது அவற்றின் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் எடுக்கவோ ஒன்றிய அரசுக்கு அவசர அதிகாரங்களை வழங்குகிறது. அத்துடன் இந்தக் கால அளவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கவும் இது அனுமதிக்கிறது. இதுபோல் பிரிவு 11, தொடர் கட்டண உயர்வுக்கு வழி வகுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதுபோல் இந்த மசோதாவின் 3, 4 மற்றும் 5வது அத்தியாயங்கள், ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தரநிலைகள் சார்ந்த கவுன்சில்களின் அமைப்பை விவரிக்கின்றன. இவை ஒவ்வொன்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புகளாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஒழுங்குமுறை மற்றும் தரநிலைகள் சார்ந்த கவுன்சில்களில் மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு சார்பில் ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே சுழற்சி முறையில் இடம்பெற வேண்டும் என்று மசோதா வரையறை செய்கிறது.
மேலும், பிரிவுகள் 18 முதல் 21 வரை, விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் ஆணைய தலைவரை நியமனம் செய்வது மற்றும் அதற்கான தேர்வுக் குழுவை அமைக்கும் நடைமுறைகளையும் விவரிக்கிறது இதுவும் அதிகாரக்குவிப்புக்கு வழி வகுக்கும் அம்சங்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்த மசோதாவை ஆய்வு செய்து வரும் பாஜ எம்பி புரந்தேஸ்வரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு, தனது அறிக்கையை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க இருக்கிறது.
இதன் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான கூட்டம் வரும் ஜூலை 20ம் தேதி நடைபெற இருக்கிறது. புதிய மசோதாவில் உள்ளபடி ஒன்றிய அரசிடம் உயர் கல்வி அதிகாரம் சென்று விட்டால் பாடத்திட்டங்கள் காவி மயம் ஆகி, நமது வரலாறே மறைக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது என கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏனெனில் பாடத்திட்டங்களை மாற்றுவது கொள்கை திணிப்பு ஆகியவை ஒன்றிய பாஜ அரசின் தொடர் முயற்சிகளாக மேற்கொள்ளப்படுகின்றன.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த மறுத்ததால் நிதி வழங்க மறுத்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்ட போதிலும் கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு மற்றும் உயர் கல்வியில் மாநில உரிமை பறிபோய் விடக்கூடாது என போராடியது. பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது. ஆனால், தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, வழக்கமாக இருந்த 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை 5 பேர் கொண்ட குழுவாக மாற்ற ஒப்புதல் அளித்தது.
ஆளுநரின் நிபந்தனைகளுக்குப் பணிந்து எடுக்கப்பட்டுள்ள முடிவு என அனைத்து தரப்பினரும் இதனை விமர்சித்துள்ளனர். இதே போல விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் திட்டத்துக்கும் விஜய் அரசு ஒப்புதல் அளித்து விடுமோ என்ற அச்சத்தையும் பதை பதைப்பையும் கல்வியாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை.
ஆனால், அந்த மாற்றம் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் முன்னிற்கும் கேள்வி. வரலாற்றையே மாற்றி எழுதும் ஒரு முயற்சியாகவும், மாநில உரிமைகளை பறிக்கும் அடையாளங்களை சிதைக்கும் ஒன்றாக புதிய சட்டம் இருந்து விடக்கூடாது என்ற கவலை அனைவரையும் சூழ்ந்துள்ளது.
* ‘குவிக்கப்படும் அதிகாரம்’ பாஜ ஆளும் மாநிலங்களே எதிர்ப்பது ஏன்?
மசோதாவில் உள்ள பிரிவுகள் 45 மற்றும் 47 ஆகியவை தான் அதிகாரக் குவிப்பை வகைப்படுத்தும் அம்சங்கள் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனையின்போது கூட இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற ஒன்றிய பல்கலைக்கழக தரப்பில் கூட இந்த பிரிவுகளை சுட்டிக்காட்டியே விமர்சனங்களை முன்வைத்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இப்போதும் திமுக, மாநில உரிமை பறிபோய்விடக் கூடாது என அதே நிலைப்பாட்டை முன்வைத்து வருகிறது. தெலங்கானா போன்ற பாஜ அல்லாத அரசுகளும், ஆந்திரப் பிரதேசம் போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளும் கூட விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் தலைவரை நியமிப்பதில் ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதாக கருத்துக்களை முன்வைத்திருக்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகரிகா கோஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி சஞ்சய் குமார் ஜா ஆகிய நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்களும் இதே கருத்தையே முன்வைத்துள்ளனர். ஆணைய தலைவர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, தேர்வுக்குழுவில் ஒன்றிய அரசு பிரதிநிதிகளின் ஆதிக்கம் தான் உள்ளது.
ஆசிரியர்கள், பல்கலைக்கழகச் சங்கங்கள், மாநில அரசுகள், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இந்த தேர்வுக்குழுவில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல் பிரிவு 18, 20, 21, 45 மற்றும் 47 ஆகிய பிரிவுகள் அனைத்துமே, அனைத்து கவுன்சில்களையும் கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு முழு அதிகாரம் வழங்குகிறது என சஞ்சய் குமார் ஜா சுட்டிக்காட்டியிருக்கிறார். பிரிவு 47ல் ஒன்றிய அரசுக்கு வழங்கப்படுள்ள அதிகாரம் குறித்து ஆந்திரப் பிரதேச அரசும் கவலை தெரிவித்துள்ளது.
* இறுதி அறிக்கை கூட்டம் இன்று நடக்கிறது
மசோதாவில் உள்ள உயர் கல்வி மீதான அதிகாரக் குவிப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் சுயாட்சிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, இது 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவர் பாஜ எம்பி எல்.புரந்தேஸ்வரி. இந்த குழுவின் இறுதி அறிக்கைக்கான கூட்டம் ஆந்திர அரசின் ஆட்சேபம் காரணமாக ஜூலை 20ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த கூட்டம் இன்று நடக்க உள்ளது. இந்த மசோதா மீதான அறிக்கை 2026ன் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* வெளிநாடுகளில் எப்படி?
அமெரிக்காவில், உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பு இல்லை. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் அந்தந்த மாகாணங்கள், பிராந்தியங்களுக்கு உட்பட்டு சில அமைப்புகள் உள்ளன. சீனா மற்றும் சிங்கப்பூரில் அரசே உயர்கல்வி ஒழுங்குமுறையை நேரடியாக மேற்கொள்கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழுக்களில் கல்வி சுதந்திரம், ஒழுங்குமுறை அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் தலையீடுகள் இல்லை. பாடத்திட்டங்களுக்கும் சுதந்திரம் உள்ளது.
* உயர்கல்வியை நிர்வகிக்கும் தற்போதைய அமைப்புகள்
1. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)
2. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)
3. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ)
* புதிதாக ஏற்படுத்தப்படும் ஒற்றை அதிகார அமைப்பு விக்ஷித் பாரத் சிக்சா அதிஷ்தான் இதன் கீழ் உள்ள 3 கவுன்சில்கள்
1.கல்வித் தரநிர்ணய கவுன்சில்
2.ஒழுங்குமுறை கவுன்சில்
3.அங்கீகார கவுன்சில்
*இந்த ஒற்றை அதிகார அமைப்பு தலைவர் மற்றும் 12 உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும். அனைவரும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார்கள். மூன்று கவுன்சில்களிலும் தலா 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை, ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி குடியரசு தலைவரே நியமிப்பார் என மசோதா குறிப்பிடுகிறது. இதுவே, ஒற்றை அதிகார மையமும் ஒன்றிய அரசிடமே செல்லும் என்பதற்கு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
* நாட்டில் தற்போது உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் கலைக்கழகங்கள்
(நிர்வகிப்பது பல்கலைக்கழக மானியக் குழு) 1,290
* தொழில்நுட்ப நிறுவனங்கள் (நிர்வகிப்பது – ஏஐசிடியு) 8,489
* ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (நிர்வகிப்பது என்சிடிஇ) 17,752
* மருத்துவ கல்லூரிகள் (தேசிய மருத்துவ கவுன்சில்) 823
* கட்டிடக்கலை கல்லூரிகள் (கட்டிடக்கலை கவுன்சில்) 362
* தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள்
* பல்கலைக்கழகங்கள் 65
* கல்லூரிகள் 1,642
* அரசு கல்லூரிகள் 188
* அரசு உதவிபெறும் கல்லூரிகள் 161
* சுயநிதி கல்லூரிகள் 1,293
