×

2015ம் ஆண்டு நிகழ்ந்ததை போல சென்னையில் இந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்படுமா? சூப்பர் எல் நினோ பாதிப்புகள் குறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி விளக்கம்

பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயரும் ஒரு இயற்கையான நிகழ்வு எல்நினோ என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு உலக அளவில் பல்வேறு இயற்கை தாக்கத்தை ஏற்படுத்தும். கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயரும் அளவை பொறுத்து எல்நினோவின் தாக்கம் இருக்கும்.

இந்த ஆண்டு 3 டிகிரி செல்சியஸ் வரை கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயரும் என்பதால் இதனை மிக வலுவான எல்நினோ அல்லது சூப்பர் எல்நினோ என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 1876ம் ஆண்டு உருவான எல்நினோவின்போது பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்ததை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு வரலாற்றில் யாரும் மறக்கவே முடியாத அளவு தாக்கத்தை ஏற்படுத்திய இயற்கை பேரிடர்களில் ஒன்று 1876ம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அது தொடர்பான ஆவணங்களை பார்த்தாலே அதன் கொடுமையை உணர்ந்து கொள்ளலாம். இந்நிலையில்தான் தற்போது உருவாகியுள்ள எல்நினோ உலக அளவில் உற்று நோக்கப்படகிறது.

ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் உலக அளவில் அதிக வெப்பம், அதிக பனிப்பொழிவு, காட்டுத்தீ, அதிக மழை, வெள்ளம் என பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், எல்நினோவும் இணைந்து என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. சூப்பர் எல் நினோவால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்;

வெப்ப அலை, வறட்சி ஏற்படும் எனவும் இன்னொரு புறம் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை நிபுணர்கள் கணிக்கின்றனர். அதன் தாக்கம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் இருக்கும் எனவும் எச்சரிக்கிறார்கள். எல்நினோ தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி முனைவர் துரை கூறியதாவது: இந்த ஆண்டு ஜூன் – ஆகஸ்ட் இடையே உருவாக தொடங்கியுள்ள எல்நினோ, பலவீன நிலையிலிருந்து வலுவான நிலையை நோக்கி செல்கிறது. செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மேலும் வலுப்பெற்று, நவம்பர் – டிசம்பர் மாதங்களில் உச்சநிலையை அடைந்து மிக வலுவான எல்நினோவாக மாறும்.

அதன் தாக்கம் அடுத்த ஆண்டு துவக்கத்திலும் சில மாதங்கள் நீடிக்கக் கூடும். எனவே, தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் எல்நினோவின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும். வடகிழக்குப் பருவமழையின் அளவு மற்றும் அதன் தாக்கத்தை எல்நினோ மட்டும் தீர்மானிப்பதில்லை. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த அமைப்புகள், கடல்மேற்பரப்பு வெப்பநிலை உள்ளிட்ட பல காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தென்மேற்கு பருவமழை குறைவதற்கான காரணிகளில் ஒன்றாக எல்நினோ இருந்தாலும், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த அமைப்புகளின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகளும் காரணமாக அமைந்தன. கடந்த 35 ஆண்டுகளில் 1997-98, 2015-16 மற்றும் 2023-24 ஆகிய 3 ஆண்டுகளில் வலுவான எல்நினோ நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

வலுவான மற்றும் மிக வலுவான எல்நினோ ஆண்டுகளில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும். 2015ல் சென்னை பெருவெள்ளம், 2023ல் மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மிகக் கனமழை பதிவானதுடன், டிசம்பரில் தென் தமிழக மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. எல்நினோவை ஒரு முக்கிய பின்னணி காரணியாக கருதலாம்; ஆனால் வடகிழக்கு பருவமழையின் அளவையும் தாக்கத்தையும் அது மட்டும் தீர்மானிப்பதில்லை.

வலுவான அல்லது மிக வலுவான எல்நினோ ஆண்டுகளில் உருவாகும் சில புயல்கள் அதிக தீவிரம் பெறும் வாய்ப்பு உள்ளது. புயலின் தன்மையை எல்நினோ மட்டும் தீர்மானிப்பதில்லை. கடல்மேற்பரப்பு வெப்பநிலை, வளிமண்டல ஈரப்பதம், புயலை வழிநடத்தும் காற்றோட்டம் உள்ளிட்ட அப்போதைய வானிலை மற்றும் கடல்சார் சூழ்நிலைகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன. எல்நினோ ஒரு முறை உருவானால் 9 முதல் 15 மாதங்கள் வரை நீடிக்கும்.

எல் நினோவால் தமிழகத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதுடன், இரவு நேரங்களிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கலாம். இதனால் வெப்ப அலைகளும், வெப்பமான இரவுகளும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு தமிழகத்தில் வெயில் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை எல்நினோ மட்டும்
தீர்மானிக்காது.

வடகிழக்குப் பருவமழை எப்படி அமைகிறது, மேகமூட்டம் எப்படி உள்ளது, கடல் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல காரணிகளும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெப்பம் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பது அப்போது நிலவும் மற்ற வானிலைச் சூழ்நிலைகளைப் பொறுத்தே அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

* பெண்களுக்கான பிரச்னைகள்
வெப்ப அலை அனைவரையும் பாதிக்கும் என்றாலும் பெண்களுக்கான பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வெப்ப அலையின் தாக்கத்தால், சமையல் வேலைகளில் ஈடுபடும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அவர்களின் மனநலம், உடல்நலம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், வறட்சிக் காலங்களில் குடும்பத்திற்கு தேவையான நீரை சேமிக்கவும், சாதாரண நாட்களை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் உடல் உழைப்பைச் செலுத்த வேண்டிய தேவையும் ஏற்படும்போது மேலும் பாதிப்புகளை சந்திப்பார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* அதீத வறட்சிக்கும் வாய்ப்பு: அதி தீவிர மழையும் வரும்
எல்நினோ தாக்கம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியதாவது:
இந்த ஆண்டு உருவாகவுள்ள சூப்பர் எல்நினோ 2015, 1997, 1982 உள்ளிட்ட பல்வேறு ஆண்டுகளிலும் உருவாகியுள்ளது. கடந்த 1876ம் ஆண்டு 2.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயர்ந்து இருந்தது. அந்த காலகட்டத்தைத்தான் தாது வருடப்பஞ்சம் என்கிறார்கள்.

ஆனால் இந்த ஆண்டு 3 டிகிரி செல்சியஸ் வரை கடல் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த எல்நினோவின் தாக்கம் ஒட்டுமொத்த உலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி, வெப்ப அலை, காட்டுத்தீயும், 30 சதவீத பகுதிகளில் அதிதீவிர மழை, குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை குறைவாகவும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் நல்ல மழையைப் பெறும். தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானி சாகர் உள்ளிட்ட முக்கிய அணைகள் தென்மேற்குப் பருவமழையை நம்பியிருக்கக்கூடியவை. வடகிழக்குப் பருவமழை அதிகமாகப் பெய்தாலும் அணைகளில் தேக்கிவைக்க முடியாது.

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வடகிழக்குப் பருவமழை நீரை தேக்கிவைக்கவில்லை என்றால் கடலோர மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டு குடிநீர் பிரச்னை ஏற்படும். இந்த ஆண்டு தமிழகத்தில் வெப்பம் அக்டோபர் வரை நீட்டிக்கக்கூடும். அடுத்த ஆண்டு உலகின் சராசரி வெப்பநிலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரிக்கும். தமிழகத்தில் மார்ச் முதல் ஜூலை வரையிலான வெப்ப அலை அதிகமாக இருக்கும். அதேபோல், மழையில்லாத வறண்ட நாட்களும் அதிகமாக இருக்கும்; அதனால் வறட்சி ஏற்படக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

* வறட்சியை நோக்கி செல்கிறதா தமிழகம்?
தற்போதைய சூழலில் தமிழகம் கடும் வறட்சியை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் சூழலைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தென் மேற்குப் பருவமழை குறைவாகப் பெய்துள்ளதால் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளான மேட்டூர், பவானி சாகர் உள்ளிட்ட அணைகளின் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. அதனால், மேட்டூர் அணை குறுவை பாசனத்திற்கு திறக்கப்படவில்லை. அதனால் டெல்டா பகுதிகளில் இப்போதே நீர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு நல்ல மழை பெய்தாலும், அது அணைகளை நிரப்ப உதவாது என்பதால், தமிழகத்தில் வறட்சி ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டில் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கிறார்கள். அதனால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்போதே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கிவிட்டது. வறட்சியை கண்காணிக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* தொழிலாளருக்கு பாதிப்பு
எல்நினோவினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்னை வெப்ப அலை. அடுத்த ஆண்டு தமிழகத்தில் மிகக்கடுமையாக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். வறட்சி, மழை இல்லாதது ஆகியவற்றுடன் வெப்ப அலையும் சேர்கையில் மிகமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அதனால், வெயிலில் வேலை செய்யும் சூழலில் உள்ள தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திப்பார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வெப்பவாதம் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளைச் சந்திக்கக்கூடும்.

* கடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
எல்நினோ நிலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு நிகராகக் கடலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசிய கடல்சார் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான நாராயனி சுப்ரமணியன் கூறியதாவது: கடல்நீரின் மேல்மட்ட வெப்பநிலை ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில் தற்போது எல்நினோவால் இன்னமும் அதிகமாகும். கடல் குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்கும்போதுதான் அதில் உயிர்சத்துக்கள், வேதியல் சுழற்சிகள் சரியாக நிகழும்.

அந்தச் சுழற்சி சரியாக இல்லை என்றால் அதன்மூலம் உருவாகும் உயிர் சத்துக்கள் மற்றும் வேதிப்பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கும் பாசி உள்ளிட்ட கடல்வாழ் உயிர்கள் பாதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும். மேலும், கடல் வெப்பம் அதிகரிக்கையில் மீன்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும். அதன் விளைவாக அடுத்த ஆண்டு மீன் கிடைப்பது குறையும். மேலும், வெப்பம் அதிகரிப்பதால் பவளப் பாறைகளுக்கு உணவு தயாரிக்கும் பாசிகள் அங்கிருந்து வெளியேறும். அதனால் பவளப் பாறைகள் நிறத்தை இழக்கும்.

நீண்ட நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருந்தால் பாசிகள் இல்லாமல், பவளப்பாறைகள் இறந்துபோகும். அதை நம்பி இருக்கும் மீன்கள், சங்கு உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படும். ஏற்கனவே கடலில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், இந்த எல்நினோ என்ன மாதிரியான பாதிப்புகளைக் கொண்டுவரும் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவர் சொல்வதன் அடிப்படையில் பார்க்கையில், கடலும் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கும். மேலும், அடுத்த ஆண்டு மீனவர்களுக்கு மீன் கிடைப்பது குறைந்து, மீன் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

* விவசாயம் பாதிக்கும்: உணவுப்பொருட்கள் விலையேறும் அபாயம்
ஏற்கனவே தென்மேற்குப் பருவமழை குறைந்துள்ளதால் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி குறைந்துள்ளது. மேலும், பல்வேறு அணைகளில் நீர் இருப்பும் குறைவாக உள்ளதால் தமிழகம் முழுவதும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்.  தற்போது நீலகிரியில் ஏற்பட்டுள்ள வறட்சியால் மலைக் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு காரணங்களால் அரிசி, பருப்பு, உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருடகளின் விலை கடுமையாக உயர்ந்துவரும் நிலையில், இந்த வறட்சி பாதிப்பால் விவசாயம் பாதித்தால் அது கடுமையான விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். அது நடுத்தர மக்களுக்குப் பொருளாதார ரீதியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Tags : Chennai ,Meteorological Center ,Super El Niño ,Pacific Ocean ,elnino ,
× RELATED சென்னை, பெங்களுருவில் அதிகம்; பருவநிலை...