17 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழும் உமர்அப்துல்லாவுக்கு விவாகரத்து

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மனைவி பாயலை 17 ஆண்டுகளாக பிரிந்து வாழும் நிலையில், இருவருக்கும் உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருப்பவர் உமர் அப்துல்லா. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான இவர், கடந்த 1994ல், பாயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாஹிர் மற்றும் ஜமீர் என இரு மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக 2009 முதல் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தாலும், பாயலுடனான பிரிவை 2011ல் ஒமர் அறிவித்தார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் உமர் விவாகரத்து கோரினார். இந்த மனு, 2016ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா மேல் முறையீடு செய்தார். இதில், எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம், 2023ல் குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

மேலும், பாயலுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.1.5 லட்சம், மகன்களில் ஒருவரின் கல்விச் செலவுக்காக மாதந்தோறும் ரூ.60,000 வழங்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது 17 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதால், இது ‘முறிந்துபோன திருமணம்’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆராதே அடங்கிய அமர்வு முன் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, உமர் மற்றும் பாயல் இணைந்து பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். மேலும், ஒருவொருக்கொருவர் எதிராக தாக்கல் செய்திருந்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: