புதுடெல்லி; சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகிறார். டெல்லியில் செப்டம்பர் 12,13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 12ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார். தற்போது, எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் சீன அதிபரின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 12ம் தேதி ரஷ்ய அதிபர் புடினும் இந்தியா வருகிறார். 2026ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் வேளையில் இந்த உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
