திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த கணத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பாப்பா(76). இவர், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பஸ்சில் இருந்து இறங்கி, பெரும்பாக்கம் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த வாலிபர், திடீரென மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார்.
அப்போது நிலைதடுமாறி விழுந்ததில் மூதாட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் கேட்டு அவ்வழியாக சென்ற மக்கள், ஓடி வந்து பைக்கில் தப்ப முயன்ற வாலிபரை விரட்டினர். ஆனாலும், அவர் தப்பிவிட்டார். புகாரின்படி திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
பைக் பதிவு எண் மற்றும் சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாலுகா மேல்செவலை கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (32) என்பதும், இவர் கடந்த 2017ல் ஆயுதப்படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அடிதடி வழக்கில் சிக்கியதால், கடந்த ஆண்டு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் ெதரியவந்தது. மேலும், இவர் மீது கீழ்குப்பம் போலீசில் இரண்டு தகராறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, விஜயனை கைது செய்த போலீசார், அவரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
