வனத்துறையில் ஆட்சேர்ப்பு விவகாரம்; கர்ப்பத்தை காரணம் காட்டி அரசு வேலை வழங்க மறுப்பது அநீதி: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: பெண்களின் தாய்மை உரிமையையும் வாழ்வாதார உரிமையையும் பறிக்கும் வகையில் கர்ப்பத்தை காரணம் காட்டி அரசு வேலையை மறுக்கக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் வனக்காவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் பணி நியமனத்திற்காக, 2023ம் ஆண்டு கோமல் ஜெய்ஸ்வால் என்ற பெண் விண்ணப்பித்திருந்தார். அவர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், அவருக்கு 14 கிலோமீட்டர் தூரம் நடக்கும் உடற்தகுதி தேர்வு நடத்த அட்டவணைப் படுத்தப்பட்டது.

அந்த சமயத்தில் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்ததால், பிரசவத்திற்குப் பிறகு தனக்கு உடற்தகுதித் தேர்வை தள்ளிவைத்து நடத்தக் கோரி உத்தர பிரதேச மாநில தேர்வு வாரியத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால், தேர்வை தள்ளிவைக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி அவரது கோரிக்கையை தேர்வாணையம் நிராகரித்ததோடு, தனி நீதிபதி அமர்வும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அருண் பன்சாலி மற்றும் நீதிபதி ஜஸ்பிரீத் சிங் அடங்கிய அமர்வு, தேர்வாணையத்தின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றம், ‘கர்ப்பத்தைக் காரணம் காட்டி ஒரு பெண்ணுக்கு உடற்தகுதித் தேர்வை தள்ளிவைக்க மறுப்பது, அந்தப் பெண்ணை குழந்தை பெற்றெடுப்பதா அல்லது வேலைக்குச் செல்வதா என்ற நிலைக்குத் தள்ளுகிறது.

ஒரு பெண்ணின் திருமண நிலையையோ அல்லது கர்ப்பத்தையோ தகுதியின்மையாகக் கருத முடியாது. எனவே மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் உடற்தகுதித் தேர்வை நடத்த வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பிரிவில் குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட அதே தேதியிலிருந்து இவருக்கும் அனைத்து சலுகைகளுடன் பணி வழங்கப்பட வேண்டும். அதுவரை ஒரு பணியிடத்தைக் காலியாக வைக்க வேண்டும்’ என்று தேர்வாணையத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Related Stories: