சங்கரன்கோவில்,ஜூலை 31: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு 12ம் நாள் நிறைவு விழாவில் சுவாமி, அம்பாள் சப்தா வர்ணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, இரவு வேளைகளில் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் திருநாளை முன்னிட்டு கடந்த 26ம் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதையொட்டி திருத்தேரில் கோமதி அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம் கடந்த 28ம் தேதி நடந்தது. ஒற்றை காலில் நின்றபடி தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளினார். மாலை 6.49 மணிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணராக காட்சி தந்தார். இதைத்தொடர்ந்து கோமதி அம்பாள் மீண்டும் சிவலிங்கமாக காட்சியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சி அளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். பின்னர் சுவாமி, அம்பாள் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதைதொடர்ந்து 12ம் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் விடிய, விடிய காத்திருந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர். நேற்று கோயிலில் வைத்து சுவாமி-அம்பாள் முதல் நாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
