நாங்குநேரி அருகே கிறிஸ்தவ ஆலய பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

 

நெல்லை, ஜூலை 31: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகேயுள்ள கல்லூர் கிராமத்தில் செபஸ்தியார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தினமும் காலை, மாலையில் பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இங்கு செபஸ்தியார் சொரூபம் உள்ளது. இதில் செபஸ்தியார் சொரூபத்திலுள்ள கையில் 2 கிராம் தங்க கைசெயின் அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த உண்டியலில் ரூ.3 ஆயிரம் காணிக்கை பணம் இருந்தது. கிறிஸ்தவ ஆலயம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பூட்டப்பட்டு காலை 6 மணிக்கு ஊழியர்கள் திறப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கிறிஸ்தவ ஆலய ஊழியர்கள் ஆலயத்தை திறக்க வந்த போது அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

இதனால் பதறியபடி ஊழியர்கள் ஆலயத்திற்குள் சென்று பார்த்த போது அங்கு சொரூபத்திலிருந்த கண்ணாடி பேழை உடைக்கப்பட்டு தங்க கைசெயின் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியும், கிறிஸ்தவ ஆலயம் மற்றும் ஆலயத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விஜயநாராயணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா ஸ்டீபன் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: