நெல்லை, ஜூலை 31: அம்பாசமுத்திரம் தாலுகா குறக்குடி பச்சேரியைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை (50). இவர் தொட்டி ஆட்டோவில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். அதோடு கல்லிடைக்குறிச்சி பைபாஸ் ரோடு வண்டிப்பாலம் அருகிலுள்ள கன்னடியான் கால்வாய் அருகே பன்றியும் வளர்த்து வருகிறார். இதனால், இரும்பு வியாபாரத்தை முடித்துவிட்டு ஆட்டோவை கன்னடியான் கால்வாய் அருகே நிறுத்திவிட்டு பன்றிகளின் பாதுகாப்புக்காக வாகனத்திலேயே வழக்கமாக தூங்கி வந்தார். இதுபோல், கடந்த 25ம் தேதி இரவு தனது மகனுடன் கன்னடியான் கால்வாய் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, வழக்கம்போல் வாகனத்தில் தூங்கி உள்ளார்.
பின்னர் 26ம் தேதி அதிகாலை எழுந்து டீ குடிப்பதற்காக வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அவரது ஆட்டோ திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அய்யாபிள்ளை அளித்த புகாரின் பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அம்பாசமுத்திரம் தாலுகா கௌதமபுரியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மதன்குமார் (30) என்பவர் ஆட்டோவை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
