ஆதனூர்மண்டபம் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 

நீடாமங்கலம், ஜூலை 31: திருவாரூர் மாவட்டம் அருகே நீடாமங்கலம் அடுத்துள்ள கிராமம் ஆதனூர்மண்டபம். இந்த கிராமத்தின் பிரதான சாலையின் அருகே குடியிருப்புகளுக்கு நடுவே பங்கஜவல்லி, வாசுதேவன் தம்பதியருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு இந்துஸ் டவர் நிறுவனம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. செல்போன் டவர் அமைய உள்ள இடத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக சக்தி வாய்ந்த செல்போன் உயர் கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வரும் அதிகபட்ச கதிர் வீச்சால் குழந்தைகள் பெரியவர்கள், கர்ப்பிணிகள் விலங்குகள் பறவைகள் என இப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

இந்தப் பகுதியில் செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை கைவிட்டு குடியிருப்புகள் இல்லாத பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி கிராம மக்கள் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், வட்டாட்சியர் ஒப்புதலோடு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை உடனடியாக நிறுத்தி செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆதனூர் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் பணிகளை மேற்கொள்ளும் இந்துஸ்தவர் நிறுவனத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர தேவி, துரை, சுப்பிரமணியன், ஜெயராமன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

 

Related Stories: