×

மீஞ்சூர் ஒன்றியம் மேலூரில் 18 ஆண்டுக்கு முன்பு தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட ரேஷன் கடை பணி: வாடகை கட்டிடத்தில் இடவசதி இல்லாமல் அவதி

 

பொன்னேரி, ஜூலை 31: மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரேஷன் கடை கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் அப்பணிகள் பதியிலேயே நிற்கிறது. அதனால், தற்போது வரை அப்பகுதியில் ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் பொருட்கள் வாங்கும் அவல நிலை உள்ளது. எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட பணியினை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கடந்த 2007ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரேஷன் கடை கட்டப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கோரிக்கை ஏற்று ஊராட்சி மன்ற நிர்வாகம் அங்குள்ள பத்துக்கு பத்து ஒரே அறையில் அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 810 ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க வெயிலிலும் மழையிலும் காத்துக்கிடந்து வாங்கி செல்கின்றனர். கிடப்பில் போடப்பட்ட பழைய ரேஷன் கடை கட்டிடத்தை புதுப்பிக்கவும் அல்லது புதிதாக ரேஷன் கடை கட்டிடத்தை கட்டவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என 810 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

 

Tags : Melur ,Meenjur Union ,Ponneri ,
× RELATED புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை