புழல், ஜூலை 31: சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்குள்ள கைதிகள் பலர் செல்போனிலும் பேசி வருவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது சோதனை செய்து சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன், சார்ஜர், சிம் கார்டு மற்றும் கஞ்சா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று புழல் சிறையில் சில கைதிகளிடம், சிறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சென்னை அம்பத்தூர், அயப்பாக்கம் ஐசிஎப் காலனியை சேர்ந்த சாரதி (25), அம்பத்தூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை 6ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
இவரிடம் சோதனை செய்தபோது 12 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, இவரிடம் சிறை துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், இவருக்கு சிறையில் உள்ள ஐயப்பன்தாங்கல் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் (22) என்பவர், கடந்த 26ம் தேதி சிறைக்கு வரும்போது ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து சிறைத்துறை சார்பில் சாரதி மற்றும் ராகுல் மீது புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் புழல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
