ஊத்துக்கோட்டை, ஆக. 3: பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 17ம் தேதி தொடங்கியது. இந்த விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 10 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு இந்த கோயிலில் வந்து தங்குவர். பின்னர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.
அவ்வாறு, ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, மூலக்கடை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு பஸ்கள், மாநகர பஸ்கள், மாநகர மின்சார பஸ்கள், தனியார் பஸ்கள் என நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கார் ஜீப், வேன், டிராக்டர் , மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பெரியபாளையம் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகிறது.
ஆடித்திருவிழா நேற்று 3வது வாரம் என்பதாலும், ஆடி மாதத்தில் 3வது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் இருந்து சத்தியவேடு வழியாகவும், சீத்தஞ்சேரி வழியாகவும் திருப்பி விடப்பட்டது. இதேபோல் சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் ஜனப்பன் சத்திரம் பகுதியில் மடக்கி சத்தியவேடு வழியாக திருப்பி விடப்பட்டது.
பாஜ நிர்வாகி கலெக்டரிடம் மனு
பாஜக மாநில நிர்வாகி பாஸ்கர் கலெக்டர் கவிதாவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது, பெரியபாளையம் ஆடித்திருவிழாவிற்கு பக்தர் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பெரியபாளையம் கூட்டுச்சாலை முதல் பிடிஒ ஆபீஸ் வரை சாலையின் இருபுறங்களில் உள்ள ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என நேற்றுமுன்தினம் மனு கொடுத்துள்ளார்.
