திருத்தணி, ஆக.4: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி பக்தர்களுக்கு வசதியாக நடைபாதை மற்றும் மாட வீதியில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட கடைகளை நேற்று கோயில் நிர்வாகம் சார்பில் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பழம். குளிர்பானம், தின்பண்டங்கள், பூ, பொம்மை கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் நேற்று மாலை மலைக் கோயிலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆடிக்கிருத்திகை விழாவில் வியாபாரத்தில் ஈடுபட வாங்கி வைத்துள்ள பழங்கள், பொருட்கள் விற்பனை செய்ய கோயில் அதிகாரிகள் தடை விதித்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் பக்தர்களுக்கு இடையூறின்றி வியாபாரத்தில் ஈடுபட தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வியாபாரிகளுடன் கோயில் கண்காணிப்பாளர் சித்ரா, காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
