×

பள்ளிப்பட்டு அருகே திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா : ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்

 

பள்ளிப்பட்டு, ஆக.3: பள்ளிப்பட்டு அருகே உள்ள திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராம எல்லையில் கொசஸ்தலை ஆற்றின் கரை பகுதியில் திரவுபதியம்மன் கோயிலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெளியகரம், படுதளம், மோட்டூர், கம்மப்பள்ளி, திருமல்ராஜுபேட்டை, திருநாதராஜபுரம், வெங்கட்ராஜ்குப்பம் ஆகிய கிராமங்கள் இணைத்து தீமிதி திருவிழா இங்கு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் 18 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பகலில் மகாபாரதம் சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நடைபெற்று வந்தது. விழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.மேலும், விழாவில் நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை காப்பு கட்டிய பக்தர்கள் கொசஸ்தலை ஆற்றிலிருந்து ஊர்வலமாக கோயில் வந்தடைந்தனர். அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் முன்பு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடியிருக்க வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து இன்று காலை தர்மராஜர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 

Tags : Draupadi Amman Temple Theemithi Festival ,Pallipattu ,Theemithi festival ,Draupadi Amman Temple ,Kosasthalai River ,Veliyakaram ,Pallipattu… ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம்...