×

குன்னூரில் உடனடியாக சீரமைத்து தருவதாக பொதுக்கழிப்பிடத்தை இடித்து அகற்றிய தவெகவினர்

 

குன்னூர், ஜூலை 31: நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பின்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றன. குன்னூர் நகராட்சி பகுதிகளில் இலவசக் கழிப்பிடங்கள் பல இருந்தாலும், நகரப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு கட்டண கழிப்பிடமே மக்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் நகராட்சியில் பழுதடைந்து காணப்படும் இலவச கழிப்பிடங்களை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, ‘‘கழிப்பிடத்தை உடனடியாகச் சீரமைத்துக் தருகிறோம்’’ எனக் கூறி, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் குன்னூர் சாமன்னா பூங்கா அருகே இருந்த பொதுக்கழிப்பிடத்தை இடித்து அகற்றியுனர். ஆனால், கழிப்பிடம் இடிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், தற்போது வரை அங்கு புதிய கட்டுமானப் பணிகளுக்கான எந்தவொரு அறிகுறிகளும் தென்படவில்லை. உடைக்கப்பட்ட செங்கற்களும், இடிபாடுகளும் அப்படியே கிடக்கின்றன. இதனால், “கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும்? அல்லது இந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்படுமா?” என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகமும், அமைப்பினரும் தலையிட்டு, இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கழிப்பிடக் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : Thavekas ,Coonoor ,Coonoor Municipality ,Nilgiris district ,
× RELATED கூடலூர் அருகே யானைகள் நடமாட்டம்...