கூடலூர், ஆக. 3: கூடலூரை அடுத்த சர்க்கார் மூலை பகுதியில் புலி தாக்கி மாடு பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கார் மூலை எஸ்எம் காலனி பகுதியில் வசிப்பவர் பாப்புட்டி விவசாயியான இவர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டை ஒட்டிய புல்வெளியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த மாடு ஒன்று நேற்று புலி தாக்கி இறந்துள்ளது. மாட்டின் பின்புற தொடை பகுதியை புலி சாப்பிட்ட நிலையில் இறந்து கிடந்தது.
தேவர் சோலை சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த பல மாத காலமாக தொடர்ச்சியாக புலி தாக்கி மாடுகள் பலியாகி வருகின்றன. இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட மாடுகள் பலியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் நேற்று வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி சென்றனர். புலி தாக்கி இறந்த பசுமாட்டுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
