×

கூடலூர் நகரின் பிரதான சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் பைகளில் மீண்டும் வீசப்படும் குப்பைகள்

 

கூடலூர், ஆக.1: நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரின் பிரதான சாலை ஓரங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பைகளில் குப்பைகள் கட்டி வீசப்பட்டு வருகின்றன.  இப்பகுதிகளை ஒட்டி அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் வியாபார நிலையங்கள் போன்றவற்றிலிருந்து இது போன்ற குப்பைகள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு வீசப்படுகின்றன. விதிமுறைகளை மீறி ஒரு சில உணவு விடுதிகள் மற்றும் பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு உணவு, சாம்பார், சட்னி போன்றவை இந்த பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. மேலும் ஒரு சில பேக்கரி, காய்கறி, இறைச்சி, மீன் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் வீடுகளில் உள்ள குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை அதில் கட்டி சாலை ஓரத்தில் வீசி விடுகின்றனர். இதேபோல் கூடலூர் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி ஓடும் சிறிய ஓடைகளிலும் குப்பைகள் கழிவுகளை வீசுவது அதிகரித்து வருகிறது.

Tags : Gudalur ,Gudalur city ,Nilgiris district ,
× RELATED ரயில் முன் குதித்து முதியவர் தற்கொலை