அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியில் தீடீர் தீ: போலீசார் விசாரணை

 

அருப்புக்கோட்டை, ஜூலை 31: அருப்புக்கோட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடியில் இருந்து திருப்பூர் நோக்கி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை திருப்பூரைச் சேர்ந்த பிரசாந்த் (33) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் அருகே லாரி வந்து கொண்டிருந்த போது, லாரியின் முன்பகுதியில் இருந்து புகை வாடை அடிப்பது போல தெரிந்துள்ளது.

இதனால் டிரைவர் பிரசாந்த், லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தபோது லாரியின் முன் பகுதியில் தீடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ வேகமாக பரவி லாரியின் முன்பகுதி முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறையினர், லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: