வனப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் விவசாய நிலங்களுக்கு விலங்குகள் படையெடுப்பு

 

வத்திராயிருப்பு, ஜூலை 30: கொளுத்தும் வெயிலால், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் விலங்குகள், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்டத்தின் நகர்ப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிக்குள் இருக்கக்கூடிய நீர்நிலைகள் தண்ணீர் இன்றி முற்றிலுமாக வறண்டு போய் கிடக்கின்றன. இதனால் தண்ணீர் மற்றும் இரை தேடி வனப்பகுதியை விட்டு இறங்கக்கூடிய வனவிலங்குகள், மலை அடிவாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனப்பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே தரை தள குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு வன விலங்குகளுக்கு வனத்துறையினர் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கக் கூடிய தண்ணீர் போதியதாக இல்லாததால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள், விளைநிலங்களுக்கு தேடி வருகின்றன. எனவே வனப்பகுதியை விட்டு வன விலங்குகள் முற்றிலுமாக வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்து வன விலங்குகளுக்கு போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: