சிங்கம்புணரி, ஜூலை 27: சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சேவுகப் பெருமாள் (60). இவர் தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரான்மலை – எஸ்வி மங்கலம் சாலையில் இருந்து காளாப்பூர் நோக்கி சேவுகப்பெருமாள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்ற கார் அவரது இருசக்கர வாகனத்தின் மீது திடீரென மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சேவுகப் பெருமாள் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எஸ்வி மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
