ஆற்காடு: இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மீது ஆற்காடு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகர் 1 கண்ணமங்கலம் கூட்ரோடை சேர்ந்த 34 வயது இளம்பெண் கடந்த 23ம் தேதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருந்ததாவது:
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் என்னை இணைத்துக்கொள்வதற்காக அந்த கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது. நான் உனக்காக செய்கிறேன் என்று என்னிடம் பேச ஆரம்பித்தார். தொடர்ந்து எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு ஆடையின்றி வீடியோ அனுப்பும்படி வற்புறுத்தினார். அதோடு என்னை ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார்.
இதுதொடர்பாக ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிராவிடம் (தவெக) கூறினேன். அவர் ‘வீடியோக்களை டெலிட் செய்துவிட்டு இத்துடன் பிரச்னையை முடித்துக்கொள்ளுங்கள்’ என்றார். அதற்கு சரி என கூறிய மாவட்ட செயலாளர் வீடியோ எதையும் டெலிட் செய்யவில்லை. வீடியோ எல்லாம் என்னிடம் உள்ளது. உன்னை சும்மா விடமாட்டேன். நான் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி என்னை ஆபாசமாக திட்டி மிரட்டினார்.
மேலும் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜான் பிரிட்டோ என்பவர் போன் செய்து, ‘ஏன் இதுபோல செய்கிறாய்? உன்னை சும்மா விட்ருவோமா? நீ செத்தாயடி’ என மிரட்டினார். அதோடு சாலையில் நடந்து சென்றால், யார் யாரோ மடக்கி மிரட்டுகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆகவே விஜய் மோகனை கைது செய்து அவருடைய செல்போனில் இருக்கும் என்னுடைய ஆபாச வீடியோக்களை டெலிட் செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, டிஜிபி அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் இந்த புகார் மனுவை அனுப்பி உள்ளார். அதனை தொடர்ந்து சிப்காட் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி ஆற்காடு நகர காவல் நிலையம் வந்து இளம்பெண்ணிடம் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தார்.
இந்நிலையில் தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மற்றும் ஜான் பிரிட்டோ ஆகிய இருவர் மீதும் பிஎன்எஸ் பிரிவுகள் 75 (பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல்), 76 (பெண்ணை நிர்வாணமாக இருக்க கட்டாயப்படுத்துவது), 77 (பெண்ணின் அந்தரங்கத்தை படம் பிடித்தல்), 351(2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
